தொழில் செய்வது வருமானம் ஈட்டுவதற்காக மட்டுமே என்ற சிந்தனை ஒருசிலரிடையே இருந்தாலும் மனநிறைவு பெறுவதையும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் முன்னிலைப்படுத்தி இக்கால இளையர்கள் சிலர் தங்களின் வாழ்க்கைத்தொழிலைத் அமைத்துக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு தங்களின் வேலையில் லயித்து, வாழ்க்கையில் வளர்ச்சிகண்டு வரும் நால்வரின் அனுபவங்களை அறிந்து வந்தது இவ்வார இளையர் முரசு.
‘அருவருப்பான தொழில் அல்ல’
ஊடகத் துறையில் தனது எதிர்காலத்தைக் கற்பனை செய்து பார்த்திருந்தார் திலிப் டிக்ரோஸ். பலதுறைத் தொழிற்கல்லூரியில் அத்துறையில் பட்டயமும் பெற்றார். அதில் திருப்தி காணாத அவர், குழாய்த்தொழிலை நாடினார்.
குழாய்த்தொழில் என்பது கழிவுகளைக் கையாள்வது மட்டுமல்ல, தண்ணீர் வள நிர்வாகம் குறித்த நுட்பமான அறிவியல் அதில் பொதிந்துள்ளது என்பது திலிப் சிறுவயதிலிருந்தே உணர்ந்ததாகும். பதின்ம வயதிலிருந்தே பிழைப்புக்காக குழாய்த்தொழிலில் ஈடுபட்டவர் அவரின் அப்பா டிகுரூஸ். அதனால் குழாய் அமைப்பு தொடர்பான தொழிலாளர் உரிமத்தைப் பெற டிலிப் சற்றும் யோசிக்கவில்லை.
பொறியியல் பின்னணி இல்லாத திலிப், பெரிதும் நாடியது தந்தையின் வழிகாட்டுதலையே. நான்காண்டுகளுக்குக் கட்டடக் கட்டுமான ஆணையப் பயிற்சிக் கழகத்தில் குழாய் அமைப்பு தொடர்பான பயிற்சி மேற்கொண்டு வடிகால் அமைப்பு, குழாய் பொருத்துதல் முதலியவற்றில் அவர் தேர்ச்சி பெற்றார்.
“குழாய் அமைப்பு தொடர்பான தொழில் அருவருப்பான ஒரு வேலை என்று சிலர் நினைப்பதுண்டு. உண்மையில் அது இன்றியமையாத ஒன்று. பட்டக்கல்வி பெற்றவருக்கு இணையான சம்பளமும் ஈட்டித் தரக்கூடிய ஒரு பணி,” என்றார் 28 வயது திலிப் டிகுரூஸ். சிங்கப்பூரின் அதிநவீன தண்ணீர் அமைப்புகளைத் தான் ஈடுபாட்டுடன் கவனிக்கத் தொடங்கியதாகவும் திலிப் கூறினார்.
தந்தையுடன் இணைந்து நிறுவிய ‘ஜேடி வாட்டர்ஸ்’ எனும் தண்ணீர் அமைப்பு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுகிறார் திலிப். முக்கியத் தேசிய நீர்வளத் திட்டங்களில் இவரது பங்கும் உண்டு. பொது பயனீட்டுக் கழகத்தின் மூன்றாம் துவாஸ் நீர் ஆலை, துவாஸ் தண்ணீர் மீட்பு ஆலை ஆகியவை அதில் அடங்கும்.
சாதாரண தண்ணீர் உதவி அமைப்பாளராக தொடங்கிய அவரின் பயணம் பொதுப் பயனீட்டு கழகத்தில் 15 ஆண்டுகாலம் நீடித்தது. தற்போது ‘ஜேடி வாட்டர்ஸ்’ நிறுவனத்தின் ஆலோசகராகவும் சிங்கப்பூர் குழாய்த்தொழில் சங்கத்தின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார்.
“இளம் தலைமுறையினரைக் குழாய்த்தொழிலில் காண்பது அரிது. இளையர்கள் தொழில் குறித்த தவறான எண்ணம் கொண்டுள்ளனர். அதனை மாற்ற நாங்கள் முயல்கிறோம்,” என்றார் தந்தை டிகுரூஸ் மாசிலாமணி, 61.
எதிர்காலத்துக்குத் தயாராகும் வகையில் தன் நிறுவனத்தின் நிபுணத்துவ ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளத் திட்டமிடுகிறார் திலிப்.