கலப்புத் தற்காப்புக் கலை (எம்எம்ஏ) வீரரான இளையர் அமீர் கான் அன்சாரி, நினைத்தாலும் தன்னால் தவிர்க்க முடியாத ஒரு பெருஞ்சிக்கலால் அலைக்கழிக்கப்பட்டவர்.
‘டூரெட்ஸ்’ நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட அவர், பேசும்போது இடையிடையே ஒருவித கீச்சிடும் சத்தத்தை எழுப்புவார். அவரின் தலை சில நேரங்களில் திடீரென வேகமாக அசையும். அவரின் முக பாவனைகள் மாறும். இந்த அசைவுகள் அவர் உற்சாகமடைந்தாலோ உணர்ச்சிவசப்பட்டாலோ வழக்கத்தைக் காட்டிலும் பன்மடங்காகும்.
‘டூரெட்ஸ்’ நோய்க்குறிக்குச் சிகிச்சை இல்லை. உலகின் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானோர் டூரெட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனது இளம்வயதில் அதிகம் அறியப்படாத இந்நோயினால் சக மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானார் அமீர். தற்போது எம்எம்ஏவில் மிளிரும் அவருக்கு சண்டைக் களமே அடைக்கலமாக அமைந்தது.
“எனது தலை திடீரென அசைவதால் என்னைப் புண்படுத்தும் வகையிலான பெயர்களைச் சொல்லிச் சிலர் கேலி செய்வார்கள். என்னைப் போல நடித்துக் காட்டிச் சிரித்துக்கொள்வார்கள். சிறுவயதில் என்மீதே எனக்கு வெறுப்பிருந்தது. யாரிடமும் பேசக்கூட பயமாக இருந்தது,” என்றார் 28 வயது அமீர்.
ஒவ்வொரு நொடியும் தமது உடல் அசைவுகளை, உணர்வுகளைக் கண்காணிக்க வேண்டிய சூழல் இப்போதும் உள்ளதெனக் கூறுகிறார் அமீர்.
காலப்போக்கில் இந்த நோய் தொடர்பிலான அசைவுகளைக் கட்டுப்படுத்த அவர் பழகிக்கொண்டார். மனதை ஒருநிலைப்படுத்தும் எம்எம்ஏ, அவருக்குப் பெரிதும் கைகொடுத்தது.
சண்டைபோடுவதில் ஈடுபடத் தொடங்கிய அமீரின் போக்கைக் கவனித்த தந்தை தஜூதீன், அவரின் ஆர்வத்தைத் திசைதிருப்ப முயன்றார். முறையான சண்டைப் பயிற்சிக்கு அமீரை அனுப்பி ஊக்குவித்தார். உயர்நிலைப் பள்ளியில் நாள் தவறாமல் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினார் அமீர்.
கலப்புத் தற்காப்புக் கலை மீதான அவரின் ஆர்வம் அவரை அமெரிக்கா வரை கொண்டு சென்றது. எம்எம்ஏ பயில அதிக வாய்ப்புகள் இருந்த அமெரிக்காவிற்குத் தனது 17வது வயதில் சாதாரண நிலைத் தேர்வு முடிக்காமேலேயே அவர் சென்றார்.
“சிங்கப்பூரிலிருந்து நிரந்தரமாக ஓடிவிடலாம் என்றே நினைத்தேன். புது அடையாளம், புது வாழ்வு, புது அமீர் என்றெல்லாம் திட்டமிட்டேன்,” என்று கூறிய அவரது கனவில் தேசிய சேவை ஆற்றும் கட்டாயம் குறுக்கிட்டது.
அவருக்கு இருந்த அதீத ஆர்வத்தினால் தனது நோயைக் கட்டுப்படுத்தவோ மறைக்கவோ முயற்சி செய்வதைவிட மக்களின் கண்ணோட்டங்களைப் பொருட்படுத்தாமல் இருக்க அவர் கற்றுக்கொண்டார்.
2014ல் சிங்கப்பூருக்குத் திரும்பிய அமீரை உள்ளூர் மேடைகள் பல வரவேற்றன. ஒரு முழுநேர எம்எம்ஏ வீரராக 2018ஆம் ஆண்டின் உலக (சாம்பியன்ஷிப்) போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு அவர் தகுதிபெற்றார்.
அதில் அடைந்த தோல்வியும் அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்விகளும் அவரை மனந்தளர வைத்தன.
தன் தந்தை மூளைப் புற்றுநோயால் 2020ல் மறைந்தது அமீரின் வாழ்வில் மற்றோர் இடி. தமது ஆகப் பெரிய ஆதரவாளரை அவர் இழந்துவிட்டார்.
“இந்த நோய்தான் வாழ்விலேயே நான் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய சவால் என்று எண்ணினேன். காலப்போக்கில், அதைவிட பெரிய தோல்விகள், சிக்கல்கள் ஆகியவற்றைக் கையாளும் மனப்பக்குவத்தைப் பெற்றேன்,” என்றார் அமீர்.
ஒருகாலத்தில் தமக்கு நண்பர்களும் வாழ்க்கைத் துணையும் அமையாது என்றே நினைத்த அமீர், தற்போது ஒரு கணவனாகவும் மூன்று வயது மகனுக்குத் தந்தையாகவும் இருக்கிறார்.
பிஎஸ்பி கல்விக்கழகத்தில் விளையாட்டு அறிவியல் பயின்று கடந்த ஆண்டு பட்டம் பெற்ற அவர், திறன்களை மேம்படுத்தி மீண்டும் களத்தில் இறங்கும் உறுதியில் உள்ளார்.