சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு இரு குறிப்பிடத்தக்க சாதனைகளை ஜனவரி 11ஆம் தேதி அன்று எட்டியது.
ஜோகூருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் லீ சியன் லூங் ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (ஆர்டிஎஸ்) இணைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பார்வையிட்டு, சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான சிறப்புப் பொருளியல் மண்டலம் தொடர்பான (எஸ்இஇசட்) புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பங்கேற்றது, ஆர்டிஎஸ் திட்டத்திலும் சிறப்புப் பொருளியல் மண்டலத்திலும் மலேசியா காட்டும் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
முன்னது, கடற்பால இணைப்பினால் கிடைக்கும் நன்மைகளின் நடைமுறை விளக்கமாகவும் மற்றது பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கமாகவும் இருந்தது.
சிங்கப்பூரும் மலேசியாவும் 2025ல் 60 ஆண்டு கால இருதரப்பு உறவினைக் கொண்டாட ஆவலுடன் காத்திருப்பதால், இவை சாதகமான அறிகுறிகளாகும்.
இரு நாடுகளின் முழு பலத்தையும் மேம்படுத்துவதன் மூலமும், இருநாடுகளுக்குமிடையே பொருள்கள், முதலீடுகள், மக்கள் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலமும் அதிகப் பயனடையலாம்.
அதற்கான சாத்தியக்கூறுகள் மகத்தானவை. 4 கிலோ மீட்டர் விரைவு ரயில் சேவை 2026 டிசம்பருக்குள் தயாராகும்போது ஜோகூரின் புக்கிட் சாகாருக்கும் உட்லண்ட்ஸ் நார்த்துக்கும் இடையில் ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்திற்கு 10,000 பேர் வரை பயணம் செய்ய முடியும். இதனால் கடற்பாலத்தின் மக்கள் போக்குவரத்தில் குறைந்தது 35 விழுக்காடு குறையும்.
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் சுங்கத்துறை, குடிநுழைவு, தொற்றுநோய் தனிமைப்படுத்தும் வசதிகள் உட்லண்ட்ஸ் நார்த், புக்கிட் சாகார் ரயில் நிலையங்களில் அமைந்திருக்கும் என்பது முக்கியமான அம்சம். பயணிகள் புறப்படும் நேரத்தில் மட்டுமே குடிநுழைவு சோதனைகளைச் செய்தால் போதுமானது.
கடற்பாலம், குறிப்பாக உச்ச நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் மக்களின் போக்குவரத்தால் திணறுவதால் ஆர்டிஎஸ் இணைப்பு ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதாக இருக்கும்.
நெரிசலைக் குறைப்பது சுற்றுலாவைத் தூண்டும். மலேசிய ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதை எளிதாக்கும். கவர்ச்சிகரமான நாணயப் பரிவர்த்தனை விகிதம் ஜோகூர் ஊழியர்களை ஈர்ப்பதுடன், ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிறுவனங்களால் இருதரப்பினரும் பயனடைகிறார்கள்.
ஆர்டிஎஸ் இணைப்பு பொருளியல் மண்டலத்துக்கு சாதகமாகச் செயல்படக்கூடும்.
மண்டலத்தில் அமையும் இடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், ஜோகூர் அரசாங்கம் இஸ்கந்தர் மலேசியா மையத்தை பொருளியல் மண்டலமாக்க முன்மொழிந்துள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சி பெருவழிப் பாதையாக கருதப்பட்ட இஸ்கந்தர், சிங்கப்பூரைவிட மூன்று மடங்கு பெரிதாக தெற்கு ஜோகூரில் 2,217 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இதில் கனரக தொழில்துறை மண்டலமான பாசிர் கூடாங், ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்திரி, கூலாய், செடேனாக், பொந்தியான் நகரத்தின் ஒரு பகுதி ஆகியவை அடங்கும்.
மின்னியல், சுகாதாரத்துறை, தளவாடத்துறை, நிதி, வணிக சேவைகளுக்கான முதலீட்டு இடமாக இஸ்கந்தரை மலேசியா ஊக்குவித்து வருகிறது.
ஏற்கெனவே இஸ்கந்தரில் இரண்டாவது பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக இருக்கும் சிங்கப்பூர், மண்டலத்தின் வளர்ச்சியில் அதிகம் பங்களிக்க முன்வந்துள்ளது. ஜோகூர், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். இது இஸ்கந்தரின் ஏராளமான நிலப்பரப்பையும், மனித வளத்தையும் அணுகுவதன் மூலம் கிடைக்கும் அணுகூலங்களாலும்.
மலேசியாவையும் சிங்கப்பூரையும் நெருக்கமாக்கும் அரசியல் முன்னெடுப்புகள் பாதுகாக்கப்படுவதும், இந்த லட்சிய இலக்குகளை செயல்படுத்துவதற்கு தேவையான நிர்வாக உத்வேகத்தைத் தக்கவைத்திருப்பதும் இப்போது அவசியம்.