தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ்த் திரையுலகம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
முன்னணி நாயகர்களின் புதுப் படங்களுக்கான பணிகள் சத்தமின்றி நடைபெற்று வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஹைதராபாத்தில் நடப்பதாகத் தகவல்.
அஜித், விஜய், சிம்பு, விஷால், தனுஷ், கார்த்தி ஆகியோரின் படங்கள் சம்பந்தமான ஏதேனும் ஒரு பணி நடந்து கொண்டிருக்கிறது.
அஜித்தின் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து முன்பு தகவல் கசிந்தது. எனினும், சில காட்சிகளை லேசாக மாற்றி அமைக்கவும் சில வசனங்களை புதிதாக சேர்க்கவும் வேண்டியிருந்ததாம். இதற்காக இரண்டு நாட்களுக்கு மீண்டும் படப்பிடிப்பை நடத்த வேண்டியுள்ளது.
அதே போல் விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.
மீண்டும் அங்கு சென்று திரும்புவது பெரும் செலவை ஏற்படுத்தும் என்பதால் ஹைதராபாத்தில் தேவைப்படும் காட்சிகளைப் படமாக்க உள்ளனர்.
தமிழகத்தில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படும் முன்பே அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அனுமதி கிடைத்துவிட்டது. இதனால் ரஜினியின் ‘அண்ணாத்த’, விஷாலின் ‘எனிமி’ படப்பிடிப்புகள் அங்கு தொடங்கி உள்ளன.
‘அண்ணாத்த’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. திடீரென ஒரு பாடல் காட்சியை சேர்க்க முடிவானதாம். அதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது.
தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கி வரும் ‘டி43’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புகளும் ஹைதராபாத்தில் நடக்கின்றன.