இரவுநேரக் கேளிக்கைக் கூடங்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) அன்று மீண்டும் ஈராண்டுகளுக்கு பிறகு திறக்கும் செய்தி மக்களிடையே எதிர்பார்ப்பை வரவழைத்திருந்தாலும் மறுநாள் அக்கூடங்களில் கூட்டம் நிரம்பவில்லை.
புதன்கிழமை வேலைநாள் என்பது ஒரு காரணம்.
ஏஆர்டி பரிசோதனைக்கான ஏற்பாடுகள் ஒரு சில கேளிக்கைக் கூடங்களுக்கு வெளியே இன்னும் செய்யப்படாததாலும் மக்கள் இக்கூடங்களுக்குச் செல்லும் திட்டத்தைத் தள்ளிப்போட்டனர்.
ஆனால் வெள்ளிக்கிழமை நிலைமை சில கூடங்களில் மாறியது.
‘ரூமர்ஸ்’ கேளிக்கைக் கூடத்துக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கொன்கோர்; ஹோட்டலில் இருக்கும் இக்கூடத்துக்கு தங்கள் நண்பர்களோடு திரளாக வந்ததைத் தமிழ் முரசு கண்டது.
சென்ற 13 ஆண்டுகளாக செயல்பட்டும் ரூமர்ஸ், தமிழ் வாடிக்கையாளர்கள் அதிகம் செல்லும் இடங்களில் ஒன்றாகும்.
ரூமர்ஸ் இரவுநேர கேளிக்கைக் கூடத்தினுள் நுழையும் முன்பு ஏஆர்டி பரிசோதனையைச் செய்ய ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இரண்டு ஊழியர்களின் மேற்பார்வையில் வாடிக்கையாளர்கள் ஏஆர்டி பரிசோதனையைச் செய்து 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிருந்தது.
கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டனர் என்று உறுதியானதும் அவர்கள் கேளிக்கை விடுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கூடத்தின் வாசலிலேயே ரூமர்ஸ் இயக்குநரான மகேஸ்வரி ஜெகநாதன் வாடிக்கையளர்களிடம் தாங்கள் மது அருந்தும்போது மட்டுமே முகக்கவசங்களை கழற்றலாம் என்றும் நடன மேடையில் ஆடும்போது முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவித்தார்.
இரவுநேரக் கேளிக்கைக் கூடத்தின் வண்ணமிக்க விளக்குகளும் இசை ஒலிப்பாளர்களின் (டிஜே)மெட்டுக்களும் பெரிதும் ஈர்த்தாலும் நடனமாடும்போது முகக்கவசங்களை அணிய வேண்டிய கட்டாயம் பலரை தங்கள் மேசைகளின் அருகேயே இருக்க வைத்தது.
இரண்டு ஆண்டுகளாக டிஜே வேலையில் ஈடுபடாத காரணத்தால் வெள்ளிக்கிழமையன்று பாடல்களை தேர்ந்தெடுக்க வேண்டியபோது சில சமயங்களில் எந்தப் பாடலைப் போடுவது என தடுமாறியதாகக் கூறினார், ஜீவன் சந்திரன், 32.
சவால்மிக்கத் துறையிலிருந்தாலும், இரவுநேரக் கேளிக்கைக் கூடங்களில் பல வருடங்களாக டி ஜே கலைஞராக வேலை செய்யும் இவர், இத்துறைக்கு திரும்பும் உற்சாகத்தோடு இருக்கிறார்.
கூடிய விரைவில் இக்கூடங்களில் கூட்டம் அதிகமாகும் என்று நினைத்தாலும், ஏஆர்டி சோதனைச் செய்ய அதிக கட்டணம் செலுத்தவேண்டிய காரணத்தால் சிலர் வருவதற்கே தயங்குவர் என்று ஜீவன் நம்புகின்றார்.
இருப்பினும் இரண்டு ஆண்டு கட்டுப்பாடுகளால் தங்கள் வாழ்நாளில் இரவுநேரக் கேளிக்கைக் கூடங்களுக்கு செல்லாத 18 வயது முதல் 20 வயது வரையிலான இளையர்கள் வளர்ந்து இருக்கின்றனர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத வாடிக்கையாளர் கூறினார். .
ஒரு சில நாட்களில் கிளார்க் கீ, ஆர்ச்சர்ட் போன்ற வட்டாரங்களிலுள்ள கேளிக்கைக் கூடங்களுக்கு விரைவாகச் செல்லத் தொடங்குவர் என்று அந்த வாடிக்கையாளர் பகிர்ந்துகொண்டார்.