இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கப்பூரில் உள்ள அனைத்து இரவுநேர கேளிக்கை வர்த்தகங்களும் ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து முழுமையாக செயல்பட அனுமதிக்கப்படும்.
வர்த்தக தொழில் அமைச்சும் உள்துறை அமைச்சும் கூட்டாக இதை திங்கட்கிழமை (ஏப்ரல் 4) அன்று அறிவித்தன.
கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கிய பின்னர் இரவுநேர கேளிக்கை விடுதிகள், கூடங்கள் உள்ளிட்ட அத்துறை வர்த்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. அவற்றில் சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்று மார்ச் 24 அன்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
பாதுகாப்பு கருதி, அத்தகைய வர்த்தகங்களில் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும்.
உணவு பானக் கடைகள், மதுபானக் கடைகள், நேரடி படைப்புநிகழ்ச்சிகள் போன்றவற்றுக்குக் கடைபிடிக்கப்படும் அதே பாதுகாப்பு நடவடிக்கைகள், பொருத்தமாக இருப்பின், இரவுநேர கேளிக்கை வர்த்தகங்களுக்கும் நடப்பில் இருக்கும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவற்றில் அடங்கும்.
வாடிக்கையாளர்கள் ஆடிக் களிக்கும் இரவுநேர கேள்ளிக்கை விடுதிகள், டிஸ்கோ நடனக்கூடங்கள் போன்ற இடங்களுக்குச் செலலும் முன்னர் ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சுகாதார அமைச்சின் அனுமதிபெற்ற பரிசோதனை வழங்குநர் நேரடியாக அல்லது தொலைதூரம் வழியாக மேற்பார்வையிட, ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.