சிங்கப்பூரில் முன்னிலை ஊழியர்களுக்கு கைதட்டி பாராட்டு தெரிவிக்க அழைப்பு
சிங்கப்பூரில் முன்னிலை ஊழியர்களின் அயராத பணிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் வீடுகளில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கைதட்டும் நிகழ்வு இன்று இரவு 8 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இதற்கான அழைப்பு ஃபேஸ்புக் மூலம் விடுக்கப்பட்டு வருகிறது. ‘Clap For #SGUnited’ என்ற ஒரு அமைப்பு, இன்றிரவு சரியாக 8 மணிக்கு சன்னல்கள், வீட்டு வாசல், வெளிவாசல்களில் மக்கள் நின்றபடி ஒன்றுசேர்ந்து கைதட்டி பாராட்டுமாறு அழைக்கிறது.
இந்த முயற்சியை வழிநடத்தும் மார்ட்டின் வெர்கா என்பவர், பிரிட்டன், கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் மக்கள் கைதட்டி, தாள வாத்தியக் கருவிகளை வாசித்து முன்னிலை ஊழியர்களுக்கு பாராட்டுதலை வெளிப்படுத்தியுள்ள நிலையில், சிங்கப்பூரிலும் நமக்குரிய பாணியில் நன்றி தெரிவிக்கலாம் என்ற யோசனை தமக்கு எழுந்ததாகக் கூறினார்.
மருத்துவர்கள், தாதியர்கள், பொருள் விநியோக ஊழியர்கள், பொருள் சேமிப்புக் கிடங்கு ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பேரங்காடி ஊழியர்கள், பாதுகாவலர்கள் உட்பட சிங்கப்பூரை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் அனைவரும் முன்னிலை ஊழியர்களில் அடங்குவர்.
முன்னிலை ஊழியர்களுக்கு பாராட்டுதலை வெளிப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவு இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.