'பேசும்போது வெளியாகும் எச்சில்துளிகளால்கூட கொரோனா கிருமி பரவும் சாத்தியம் உள்ளது'
பேசும்போது உருவாகும் மிகச் சிறிய எச்சில் துளிகள் மூடப்பட்ட அறைக்குள் சுமார் 10 நிமிடம் வரை காற்றில் கலந்திருக்கும் என நேற்று (மே 13) வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கொரோனா கிருமிப் பரவலில் எச்சில் துளிகளின் பங்கை எடுத்துக்காட்டும் விதத்தில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய நீரிழிவு, செரிமானம் மற்றும் சிறுநீரக நோயாளிகள் கழகத்தின் (NIDDK) ஆய்வாளர்கள் ஒருவரை “Stay healthy” எனும் சொற்களை 25 வினாடிகளுக்கு மூடப்பட்ட பெட்டி ஒன்றுக்குள் சத்தமாகக் கூறச் செய்தனர்.
அந்தப் பெட்டிக்குள் ஒளிக்கீற்று (லேசர்) செலுத்தியதில் அந்தப் பெட்டிக்குள் எச்சில் துளிகளை இருந்ததைக் காண முடிந்தது.
அந்தத் துளிகள் சராசரியாக 12 நிமிடங்களுக்கு காற்றில் கலந்திருந்ததை அமெரிக்காவின் PNAS சஞ்சிகையில் வெளியான அந்த ஆய்வு முடிவு தெரிவித்தது.
எச்சிலில் கலந்திருக்கக்கூடிய கொரோனா கிருமியின் அளவைக் கருத்தில் கொண்டு, ஒருவர் மூடப்பட்ட அறையில் ஒரு நிமிடத்துக்கு சத்தமாகப் பேசினால் அவரிடமிருந்து 1,000க்கு மேற்பட்ட கிருமிகள் கலந்த எச்சில் துளிகள் காற்றில் கலந்திருக்கும் என்றும் அவை குறைந்தபட்சம் 8 நிமிடங்களுக்கு காற்றில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
“பேசுவோரிடமிருந்து வெளியாகி 10 நிமிடங்களுக்கு மேல் எச்சில் துளிகள் காற்றில் கலந்திருப்பது, மூடப்பட்ட அறைக்குள் பேசுவதன் மூலம் கொரோனா கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் உள்ளது என்பதைக் காட்டுகிறது,” என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சத்தம் குறைவாகப் பேசினால் குறைவான அளவு எச்சில் துளிகள் வெளிப்படுவதையும் இதே ஆய்வுக் குழு கடந்த மாதம் நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்தது.
பேச்சின் முலம் கொரோனா கிருமித்தொற்று பரவலின் அளவு உறுதி செய்யப்பட்டால், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், கிருமி வேகமாகப் பரவுவதன் தொடபிலான விளக்கம் ஆகியவற்றுக்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.