(காணொளி): தேறிவரும் நோயாளிகளின் உடல், மன நலம் பேண நடனம், பயிற்சி
சிங்கப்பூர் எக்ஸ்போவில் சிகிச்சை பெற்று வரும் கொவிட்-19 நோயாளிகள் தினமும் இரு வேளை கூட்டு உடற்பயிற்சிக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இணையத்தில் பரவலாக வலம் வரும் காணொளி ஒன்றில் சுகாதாரப் பணியாளர் ஒருவர் நோயாளிகள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழிநடத்தினார் என உட்லண்ட்ஸ் ஹெல்த் கேம்பஸ் (WHC) இன்று (மே 14) அந்தக் காணொளி பற்றித் தெரிவித்தது.
(முழுத்திரையைத் தெரிவு செய்து காணொளியை முழுமையாகக் காணுங்கள்.)
தனிநபர் பாதுகாப்புக் கவசத்துடன் காணப்படும் அந்த சுகாதாரப் பணியாளர் மிகவும் ஆர்வத்துடன் இசைக்கு ஏற்ப நடனமாடுவதை அந்தக் காணொளியில் காண முடிகிறது. அவரைப் பின்பற்றி அங்கிருந்த நோயாளிகளான வெளிநாட்டு ஊழியர்களும் பயிற்சி (நடனம்) மேற்கொண்டனர்.
வேறு சில சுகாதாரப் பணியாளர்களையும் அந்தக் காணொளியில் பார்க்க முடிந்தது.
நோயாளிகளின் உடல்நலத்தைப் பேணும் நோக்கில் கடந்த திங்கட்கிழமை முதல் சில பயிற்சித் தொடர்களை எக்ஸ்போ சுகாதாரப் பராமரிப்புக் குழு தொடங்கியிருப்பதாக WHC பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
நாளுக்கு இரண்டு வேளை 15 நிமிடங்களுக்கு இந்தப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சிக்குப் பிறகு நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படுவதால் யாருக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது என்பதைக் கண்டறியும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் உள்ள 10 கூடங்களும் 8,000 படுக்கைகளுடன் சமூகப் பராமரிப்பு வசதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
மிதமான அறிகுறிகள் உடையவர்கள் சமூகப் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்படுகிறார்கள்.