‘சிங்கப்பூருடனான மலேசிய எல்லை 13 மாதங்களாக மூடியே இருப்பதால் குடும்பங்களில் பிரச்சினைகள்’
சிங்கப்பூர்-மலேசியா எல்லை கடந்த 13 மாத காலமாக மூடியே இருக்கிறது. இதனால் குடும்பங்கள் பெரும் சங்கடங்களுக்கு, மன உளைச்சலுக்கு, பிரச்சினைகளுக்கு ஆளாகிவிட்டன.
ஆகையால் எல்லையைத் திறக்க தேவையான காரியங்களைச் செய்ய மலேசிய அரசாங்கம் மேலும் முயல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சென்ற ஆண்டு மார்ச் 18 முதல் எல்லை மூடியே இருப்பதால், அன்பர்களைப் பார்க்க முடியாத அவல நிலை ஒருபக்கம் இருக்க, குடும்பங்களில் மனச்சோர்வும் பிரச்சினைகளும் அதிகமாகி இருப்பதாக மலேசியா-சிங்கப்பூர் ஊழியர் சிறப்புப் பணிக்குழுவின் தலைவர் தயாளன் ஸ்ரீபாலன் தெரிவித்தார்.
குடும்பத்தில் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி சட்ட உதவி கேட்டு பலரும் தன்னுடன் தொடர்புகொண்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த விவகாரம் காரணமாக பல குடும்பங்கள் உடைந்துபோய்விட்டதாகவும் திரு தயாளன் தெரிவித்தார். இதேபோன்ற சம்பவம் காரணமாக அண்மையில் ஒரு மாது தன் உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மலேசியர்களில் பலரும் அதிக செலவு காரணமாக மலேசியாவில் உள்ள தங்கள் குடும்பத்துக்குப் பணம் அனுப்ப இயலாத நிலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(மேல் விவரம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில்)