பங்ளாதேஷில் இருந்தபோது வெளிநாட்டு ஊழியரைக் கிருமி தொற்றி இருக்கக்கூடும்
சிங்கப்பூரில் நேற்று (ஏப்ரல் 26) 45 பேருக்குக் கிருமி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. ‘வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ்’ தங்குவிடுதியைச் சேர்ந்த பங்ளாதேஷ் ஊழியர் ஒருவரும் அதில் அடங்குவார். ஏற்கெனவே, இதே தங்குவிடுதியைச் சேர்ந்த இருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவ்விருவரில் ஒருவர் பங்ளாதேஷைச் சேர்ந்தவர். மற்றொருவர் அந்த பங்ளாதேஷ் ஊழியருடன் ஒரே அறையில் தங்கி இருந்தவர்.
இந்நிலையில், நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்ட 35 வயது பங்ளாதேஷ் ஊழியர், தங்குவிடுதியில் அமைந்துள்ள வேறு புளோக்கில் வசித்தவர் என்றும் ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருடன் அவர் தொடர்பில் இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், ‘ஜென்டா டெகரேஷன் கொன்ட்ரேக்டர்’ நிறுவனத்தைச் சேர்ந்த அந்த கட்டுமான ஊழியர், வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் அந்த ஊழியருக்கு கட்டாய தனிமை உத்தரவின்போது கிருமி பாதிப்பு இல்லை என்று சோதனையில் கண்டறியப்பட்டது.
இறுதி சோதனை ஏப்ரல் 20ஆம் தேதி செய்யப்பட்டது.
பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 22ஆம் தேதி அவர் தனிமைப்படுத்தப்பட்டார். நோய்க்கான அறிகுறிகள் அவரிடம் காணப்படாதபோதும், மறுநாள் செய்யப்பட்ட கொவிட்-19 சோதனையில் கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தேசிய பொது சுகாதார ஆய்வுக்கூடத்திற்கு வந்த மற்றொரு சோதனை முடிவில், அவருக்குக் கிருமி பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது.
சென்ற ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதிக்கும் டிசம்பர் 21ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பங்ளாதேஷுக்கு அவர் சென்றிருந்ததால், அவர் உடலில் இன்னமும் பழைய தொற்று இருக்கக்கூடும் என்றும் அது பரவும் ஆற்றலை இழந்துவிட்ட நிலையில் உள்ளது என்றும் சுகாதார அமைச்சு கூறியது.
பிரிட்டனில் படித்து வரும் 19 வயது சிங்கப்பூர் ஒருவருக்கு சமூகத்தொற்று உறுதியானதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டு செப்டம்பர் 11 முதல் டிசம்பர் 1 வரை பிரிட்டனில் இருந்த அவர், செப்டம்பரில் தமக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது என்றும் கொவிட்-19 பரிசோதனையை அவர் செய்துகொள்ளவில்லை என்றும் கூறினார்.
மீண்டும் பிரிட்டனுக்குச் செல்வதற்காக அவர் சென்ற வெள்ளிக்கிழமை கொவிட்-19 பரிசோதனை செய்தபோது, அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது.