கொரோனா நோயாளிகளை பராமரித்த எட்டு மாத கர்ப்பிணி மருத்துவர், இரு தாதியர் மரணம்
மதுரை மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்தவர் மருத்துவர் சண்முகப்ரியா, 31, (படம்). எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தாலும் கொரோனா தொற்று பரவும் இந்த நெருக்கடியான காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் இவர்.
இந்நிலையில் அவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நுரையீரலில் 90 விழுக்காடு தொற்று ஏற்பட்டதால் சண்முகப்ரியா சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் (மே 8) உயிரிழந்தார். இந்தச் செய்தி மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “டாக்டர் சண்முகப்ரியா கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
“மருத்துவர்களும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் முன்களப்பணி வீரர்களாக நிற்கும் அனைவரும் தங்களது பாதுகாப்பையும் உறுதி செய்திட அறிவுறுத்தி இருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல பல்வேறு அரசியல் கட்சியினரும் மருத்துவர் சண்முகப்ரியா மரணத்துக்கு தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒரே நாளில் இரு தாதியர்
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதயவியல் பிரிவில் கொவிட் சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு வந்த இந்திரா, 41, என்ற தாதியர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துவிட்டார்.
இச்சம்பவம் நிகழ்ந்த ஒரு சில மணி நேரத்தில் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த பிரேமா, 52, என்ற தாதியரும் நேற்று மரணமடைந்தார். சுமார் ஒன்றரை ஆண்டாக கொரோனா நோயாளிகளுக்கு இவர் சேவை செய்து வந்தார்.