‘தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை’
அமெரிக்காவில் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பல இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் (சிடிசி) கூறியுள்ளது.
முகத்தை மூடிக்கொண்டு முடங்கியிருந்த அமெரிக்கர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான தொடக்கமே இது என சிடிசி கூறியுள்ளது.
அதற்காக கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டிக் கையேடு திருத்தப்பட்டுள்ளதாக சிடிசி கூறியது.
இந்த நடவடிக்கை அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் என்று நம்புவதாக சிடிசி கூறியது.
அதேபோல் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைபிடிக்கத் தேவையில்லை என்றும் சிடிசி அறிவித்துள்ளது.
இந்த நிலையம் கொவிட்-19 கட்டுப்பாடு குறித்த தனது திருத்தப்பட்ட வழிகாட்டிக் கையேட்டை வெளியிட்டது.
அந்தக் கையேட்டின்படி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் அதில் விதிக்கப்பட்டிருந்தன. அதற்கு பலதரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து சிடிசி தனது வழிகாட்டி கையேட்டில் திருத்தம் செய்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிடிசியின் இந்த அறிவிப்புக்கு பலதரப்பினரிடையே வரவேற்புக் கிடைத்துள்ளது.