மலேசியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கிருமித்தொற்று பாதிப்பு
மலேசியாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், கடினமாக இருந்தாலும் மலேசிய மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (மே 20) அங்கு 6,806 பேர் தொற்றுக்கு ஆளானதாக சுகாதார அமைச்சு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. 46 பேர் மாண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக 6,000த்திற்கும் மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.
திடுக்கிடும் அளவில் அதிகரித்துள்ள கிருமித்தொற்று சம்பவங்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த கடினமான காலகட்டத்தை மக்கள் கடந்து வருவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சங்கிலியை உடைக்க மலேசியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும், வருமானம் இல்லாதவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீண்டும் அறிமுகப்படுத்துவது சரியானது, ஆனால் அதை உடனடியாக செயல்படுத்துவதில் நாம் தயக்கம் காட்டுகிறோம்,” என்று இன்று (மே 20) அவர் வெளியிட்ட வலைப்பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
தடுப்பூசி போடுவது விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.