இந்திய தயாரிப்பு தடுப்பூசியின் தடுப்பாற்றல் விவரம் வெளியீடு
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து அதன் நோய் எதிர்ப்பு ஆற்றல் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்தத் தடுப்பூசி ஒட்டுமொத்த கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்புக்கு எதிராக 77.8 விழுக்காட்டு ஆற்றலைக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 93.4 விழுக்காடு பலனை இத்தடுப்பூசி தருவதாகவும் ஓரளவு பாதிப்புள்ள நோயாளிகளுக்கு 78 விழுக்காடு பலனைத் தருவதாகவும் இதனைத் தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்டா என உருமாற்றம் அடைந்துள்ள கிருமியின் தொற்றுக்கு எதிராக 65 விழுக்காட்டு செயல்திறனை கோவேக்சின் கொண்டிருப்பதாக இந்நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டு கட்டப் பரிசோதனைகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் மூன்றாவது, இறுதிக்கட்டப் பரிசோதனை தாமதமடைந்து வந்தது. ஒருவழியாக மூன்றாம் கட்டப் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 25 நகரங்களில் கொவிட்-19 அறிகுறி காணப்பட்ட 130 பேருக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
குறிப்பாக, இரண்டாவது முறையாக அவர்களுக்குத் தடுப்பூசி போட்ட இரு வாரங்களுக்குப் பின்னர் நோய் எதிர்ப்பாற்றல் விகிதம் தெரிய வந்ததாக பாரத் பயோடெக் கூறியுள்ளது.
19க்கும் 98க்கும் இடைப்பட்ட வயதினர் மூன்று கட்டப் பரிசோத னைகளிலும் கலந்துகொண்டதாக அது தெரிவித்தது. மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தப்படுவதற்கு முன்பிருந்தே கோவேக்சின் இந்தி யாவில் போடப்பட்டு வருகிறது.