எல்லாச் சந்தைகளிலும் உள்ள மீன்கடைக்காரர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் புதிய கொவிட்-19 தொற்றுக் குழுமம் உருவாகி இருப்பதைத் தொடர்ந்து, எல்லாச் சந்தைகளிலும் உள்ள மீன்கடைக்காரர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று சுகாதார அமைச்சு இன்று (ஜூலை 17) அறிவித்துள்ளது.
அந்த மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஹோங் லிம் சந்தை, உணவு நிலையத்திற்கு கொரோனா பரவிவிட்டதால், அது மற்ற சந்தைகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்லாச் சந்தைகளிலும் உள்ள மீன்கடைக்காரர்கள் எங்களது பரிசோதனை நிலையங்களுக்கு வந்து சோதனை செய்துகொள்ள தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் தொடர்ந்து தங்களது உடல்நிலையைக் கண்காணித்துக்கொள்ள ஏதுவாக ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைக் கருவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்,” என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
இம்மாதம் 3ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதிவரை ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் பணியற்றிய அனைவரும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர்.
அந்தக் காலகட்டத்தில் அத்துறைமுகத்திற்கு வந்து சென்ற அனைவர்க்கும் சிறப்புப் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு கூறியிருக்கிறது.