மொரிஷியஸ் தீவில் கொவிட்-19 கோரத் தாண்டவம்
போர்ட் லுயில்: மொரிஷியஸில் கொவிட்-19 பாதிப்பு கட்டுக்கடங்காமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று வாரங்களுக்குள் நாட்டைச் சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிட நடவடிக்கைகள் எடுத்துவரப்பட்ட நிலையில், தற்போது நெருக்கடிநிலை அபாய நிலையை எட்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரிஷியஸில் பலருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறிவருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. போதுமான செயற்கை சுவாசக் கருவிகளும் இல்லை என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது, கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மாண்டோரை அடக்கம் செய்யவும் மொரிஷியஸின் பிரதான இடுகாட்டில் இடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கடந்த இரண்டு மாதங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,600க்கும் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, அந்நாட்டின் ஒவ்வொரு 100,000 குடிமக்களுக்கும் 1,005 பேருக்குச் சமம். மொரிஷியஸின் முன்னாள் பிரதமரான 74 வயது நவீன் ராம்கூலம் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மொரிஷியஸ் மருத்துவமனைகளில் இடம் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்காக அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.