கொவிட்-19 சூழலில் மலேசியாவில் 78,000 தம்பதிகள் மணமுறிவு
மலேசியாவில் கடந்த ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 78,000 தம்பதிகள் மணமுறிவு செய்துகொண்டதாக அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் வரை, முஸ்லிம்கள் அல்லாத 10,346 தம்பதிகளும் 66,440 முஸ்லிம் தம்பதிகளும் மணமுறிவு செய்துகொண்டதாக அவர் கூறினார்.
முஸ்லிம் அல்லாத தம்பதிகளைப் பொறுத்தவரை, ஆக அதிகமாக சிலாங்கூர் மாநிலத்தில் 3,160 தம்பதிகள் மணமுறிவு செய்துகொண்டனர். அடுத்தடுத்த நிலைகளில் கோலாலம்பூரில் 2,893 தம்பதிகளும் பேராக்கில் 1,209 தம்பதிகளும் மணமுறிவு செய்துகொண்டனர்.
முஸ்லிம் தம்பதிகளைப் பொறுத்தமட்டில், ஆக அதிகமாக ஜோகூரில் 7,558 தம்பதிகள் மணமுறிவு செய்துகொண்டனர். அடுத்ததாக, கெடாவில் 5,985 தம்பதிகளும் கிளந்தானில் 5,982 தம்பதிகளும் மணமுறிவு செய்துகொண்டனர்.
மலேசிய நாடாளுமன்றத்தின் கீழவையில் புதன்கிழமை (செப்டம்பர் 15) டாக்டர் ஹசன் பஹ்ரோம் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இஸ்மாயில் அனுப்பிய எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்ததாக தி ஸ்டார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலும் அதனால் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகளும் திருமணமான தம்பதிகள்மீதும் குடும்ப அமைப்பின்மீதும் நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது என திரு இஸ்மாயில் குறிப்பிட்டார்.