சிங்கப்பூர், ஹாங்காங்கிற்குத் தேவையின்றி பயணம் செய்ய வேண்டாம்: அமெரிக்கா
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் பயணம் மேற்கொள்வது முன்பைவிட ஆபத்தானதாக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் சிங்கப்பூருக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளும்படி அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் (சிடிசி) திங்கட்கிழமை (செப்டம்பர் 27) சொன்னது. சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று “அதிக அளவில்” இருப்பதை அது சுட்டியது.
சிங்கப்பூருக்கான பயணச் சுகாதார ஆலோசனையை மூன்றாம் நிலைக்கு அது உயர்த்தியுள்ளது. தற்போது மூன்றாம் நிலையில் உள்ள மற்ற நாடுகளில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனீசியா, ஜப்பான், வியட்னாம், பிலிப்பீன்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
ஹாங்காங்கிற்கான தன் பயணச் சுகாதார ஆலோசனையை இரண்டாம் நிலைக்கு சிடிசி உயர்த்தியது. அங்கு “மிதமான அளவு” கிருமிப்பரவல் இருப்பதை அது சுட்டியது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் ஹாங்காங்கிற்கும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளும்படி சிடிசி கேட்டுக்கொண்டது.
சிடிசியின் ஆக உயரிய பயண ஆலோசனை நான்காம் நிலையாகும்.