போலி தடுப்பூசிச் சான்றிதழ் காட்டியவருக்கு மூன்று வாரச் சிறை
உணவகத்தில் சாப்பிடுவதற்காக, கைபேசி செயலியைப் பயன்படுத்தி தாம் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதாக போலிச் சான்றிதழைத் தயாரித்தார் வெளிநாட்டு ஆடவர் ஒருவர்.
தமது சக ஊழியரின் தடுப்பூசிச் சான்றிதழைப் பிரதி எடுத்து, அதில் இருந்த பெயரை மாற்றி தமது பெயரைப் போட்டுக்கொண்டார் சீனாவைச் சேர்ந்த ஸாங் ஷாவ்பெங், 30.
ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் உள்ள டானுக்கி ராவ் உணவகத்தில் சீனாவைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் சென்ற அவர் போலிச் சான்றிதழைக் காட்டியிருக்கிறார். அங்குள்ள ஊழியர்கள் அதனைப் போலி என்று கண்டுபிடித்து, அவரையும் அவரின் நண்பர்களையும் விரட்டிவிட்டனர். பின்னர் போலிசில் புகார் அளித்தனர்.
போலி ஆவணம் தயாரித்த குற்றத்தை ஸாங் ஒப்புக்கொண்டார். அவருக்கு மூன்று வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உணவகத்தில் சாப்பிடும் பொருட்டு போலித் தடுப்பூசிச் சான்றிதழ் தயாரித்ததற்காக இங்கு சட்டத்தால் தண்டிக்கப்பட்டிருக்கும் முதல் நபர் ஸாங் ஆவார்.
அமெரிக்கா செல்லத் திட்டமிட்ட ஸாங்கும் சீனாவைச் சேர்ந்த அவரது இரண்டு சக ஊழியர்களும் அமெரிக்கா செல்லும் வழியில் சிங்கப்பூர் வந்திருந்தனர்.