கொவிட்-19 கிருமியை ஒழிக்கும் முயற்சியைக் கைவிட்டது நியூசிலாந்து
கொவிட்-19 கிருமியை ஒழிக்கும் முயற்சியை நியூசிலாந்து திங்கட்கிழமை (அக்டோபர் 4) கைவிட்டது. அந்நாட்டின் ஆகப்பெரிய நகரான ஆக்லாந்தில் சில கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
சிங்கப்பூரைப்போலவே கொவிட்-19 கிருமியுடன் வாழப் பழகிக்கொள்வதுடன் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த நியூசிலாந்து முனையும்.
கடந்த ஆண்டு கொவிட்-19 பாதிப்பை பூஜ்ஜியத்துக்குக் கொண்டு வந்த ஒரு சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. ஆனால், அண்மையில் டெல்டா வகை கிருமிப்பரவல், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் அந்நாட்டு அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
“டெல்டா வகை கிருமிப் பரவலால் பாதிப்பை பூஜ்ஜியத்துக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம்,” என்று நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார்.
நியூசிலாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் மக்கள்தொகையில் ஏறக்குறைய 48 விழுக்காட்டினர், அதாவது இரண்டு மில்லியன் பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.