வெளிநாட்டுப் பயணம்: செலவு அதிகரித்தாலும் மக்களுக்கு ஆர்வம் குறைந்தபாடில்லை
சிங்கப்பூர், தடுப்பூசி போட்டவர்களுக்கு சிறப்பு வழித் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளுக்கான பயணங்களை அனுமதித்து வருகிறது.
ஆனால் கொவிட்-19 கொள்ளைநோய் சூழ்நிலையில் பயணிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் எடுக்க வேண்டியிருக்கும் என்று சிங்கப்பூர் தேசிய பயண முகவர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஸ்டீவன் ெலர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய இயல்பு நிலைக்குத் திரும்பும் சூழ்நிலையில் காப்புறுதி, கொவிட்-19 பரிசோதனை போன்றவற்றால் பயணங்களுக்கான செலவு அதிகரிக்கலாம் என்று சங்கம் தெரிவித்தது.
தொற்றால் பாதிக்கப்பட்டால் வெளிநாட்டில் நீண்டநாள் தங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம் என்று அது கூறியது.
பயணச் செலவு அதிகரித்தபோதிலும் பயணிகளிடையே ஆர்வம் குறைந்தபாடில்லை.
சிங்கப்பூரின் தற்போதைய விதிமுறையின்படி, வெளிநாட்டில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்கு பயணிகள் நாடு திரும்ப முடியாது. கொவிட்-19 பாதிப்பிலிருந்து அவர்கள் முழுமையாக குணமடைந்திருக்க வேண்டும்.
பொழுதுபோக்குப் பயணங்களை மீண்டும் தொடங்கும் ஆகப்பெரிய நடவடிக்கையாக சிறப்பு வழித் திட்டத்தின் மேலும் ஒன்பது நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்தும் தென்கொரியாவுக்கு நவம்பர் 15ஆம் தேதியிலிருந்தும் பயணம் செய்யலாம்.