இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த மலேசியா அனுமதி
இந்தியா தயாரிக்கும் கொவிட்-19 தடுப்பூசியான கோவேக்சினை பேரிடர் காலத்தில் பயன்படுத்த மலேசியா நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.
மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா விடுத்த அறிக்கையில் இதுபற்றி கூறினார்.
அந்நாட்டு மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் வியாழக்கிழமை (பிப்ரவரி 10) அன்று நடத்திய சந்திப்பில் கோவேக்சினுக்கு அனுமதி அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பதினெட்டு வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்படும்.
இருப்பினும், தடுப்புமருந்தின் தரம், பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு ஆராய்ந்து தொடர்ந்து மதிப்பிடும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
கோவேக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பயணிகள் மலேசியாவுக்கு வரலாம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கடந்த ஆண்டு நவம்பரில் தெரிவித்தார்.
கோவேக்சின் தடுப்புமருந்தை இந்தியாவின் பாரத் பயோகெமிக்கல்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
கோவேக்சின் தடுப்புமருந்தை அவசரகாலத்தில் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு கடந்த நவம்பர் மாதத்தில் ஒப்புதல் அளித்தது.