ஹாங்காங்கில் ஒரு மில்லியன் பேருக்கு கொவிட்-19 தொற்று
ஹாங்காங்கில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை கொவிட்-19 தொற்றியுள்ளது.
ஹாங்காங்கில் வெள்ளிக்கிழமை (மார்ச் 18) அன்று 20,082 தொற்றுச் சம்பவங்கள் பதிவானதை அடுத்து கிருமி தொற்றியவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.
ஆனால் உண்மையில் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை இதைவிட வெகு அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஹாங்காங்கில் வசிக்கும் 7.4 மில்லியன் பேரில் பாதி பேருக்கு கிருமி தொற்றி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதை அடுத்து கிருமி தொற்றியதைத் தெரிவிக்காமல் மறைக்க வேண்டாம் என்று ஹாங்காங் மக்களை தலைமை நிர்வாகி கேரி லாம் எச்சரித்துள்ளார்.
இல்லாவிட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வெள்ளிக்கிழமை அன்று எச்சரித்தார்.
ஏற்கெனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பரிசோதனைக் கூடங்கள் வேலைச் சுமையைக் குறைக்க, சுயபரிசோதனை முறையை ஹாங்காங் அரசாங்கம் சில நாள்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது.
ஹாங்காங் வாசிகள் தாங்களே பரிசோதனை செய்துகொண்டு முடிவுகளை இணையவாசல் வழி அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில், கொவிட்-19 தொற்றி அதை அரசாங்கத்திடம் சொல்லாமல் மறைத்த குறைந்தது ஒருவரைத் தெரியும் என்று 70 விழுக்காட்டினர் கூறியிருந்தார்.
குடும்பங்களைப் பிரிந்து தனிமைப்படுத்தப்படுவதைப் பலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
கிருமித்தொற்று தொற்றியதைத் தெரிவிக்க தவறுபவர்களுக்கு 25,000 ஹாங்காங் டாலர் (4,330 சிங்கப்பூர் வெள்ளி) அபராதமும் ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.