கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு தொற்று அதிகரிக்காததற்குக் காரணம்
சிங்கப்பூரில் மார்ச் 29ஆம் தேதியில் இருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கொவிட்-19 தொற்று பெரிதும் அதிகரிக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவிடம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) கேட்கப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த பணிக்குழுவின் இணைத் தலைவரான சுகாதார அமைச்சர் ஓங் யி காங், உலகச் சாதனையாக சிங்கப்பூரில் அதிக மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது முதல் காரணம் என்றார். நாட்டின் ஒட்டுமொத்த மீள்திறன் அதிகமாகி இருக்கிறது என்பது இரண்டாவது காரணம்.
விதிகளை மீறாமல் நடந்துகொண்டு ஒரே சமூகமாக சிங்கப்பூர் ஒத்தழைத்து இருப்பது இதற்கான மூன்றாவது காரணம் என்று சுகாதார அமைச்சர் விளக்கினார்.
அதே கூட்டத்தில் பேசிய பணிக்குழுவின் மூன்றாவது இணைத் தலைவரான வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், சிங்கப்பூரர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இதில் முக்கியமானவை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
அதோடு, தேசிய முறையில் அவர்கள் கொண்டு உள்ள நம்பிக்கையும் அதற்கான காரணம் என்று அவர் தெரிவித்தார். இருந்தாலும் இதில் மெத்தனப்போக்கு கூடாது என்று திரு கான் வலியுறுத்தினார்.