துபாய்: பிச்சை எடுத்ததற்காக ஆசிய நாட்டைச் சேர்ந்த இருவருக்கு துபாயில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணும் பெண்ணும் பிச்சை கேட்டு மெட்ரோ ரயில் பயணிகளைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்பட்டது.
அவர்கள் இருவரும் துபாயில் ஒரு மாதகாலத்தைச் சிறையில் கழிக்க வேண்டும். தண்டனை முடிந்ததும் அவர்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பப்படுவர்.
சுற்றுக்காவல் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அந்த ஆணையும் பெண்ணையும் கண்டதாகக் காவல்துறை ஆவணங்கள் தெரிவித்தன. அதிகாரிகள் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, அவ்விருவரும் சுற்றுப்பயணிகள் எனத் தெரியவந்தது.
துபாயில் இருக்கும் ஒருவரின் துணையுடன் விசா பெற்று, அவர்கள் அந்நகருக்குச் சென்றனர். அங்கிருக்கும்போது பிச்சை எடுத்துப் பணம் சேர்க்க அவர்கள் முடிவுசெய்தனர்.
தேவையான பணம் சேர்ந்ததும் தாய்நாட்டிற்குத் திரும்பி சொந்தமாகத் தொழில் தொடங்க அவர்கள் திட்டமிட்டிருந்ததாக ‘கலீஜ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஆணும் பெண்ணும் முறையே 191 திர்ஹம், 161 திர்ஹம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் அவர்கள் அப்பணத்தைச் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.