கரு முழுமையாக முதிர்வுறாமல் 22 வாரங்களிலேயே பிறந்து, ஆகக் குறைந்த நாள்களில் பிறந்த இரட்டையர்களாக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் கனடாவைச் சேர்ந்த ஏடியா நடராஜாவும் ஏட்ரியல் நடராஜாவும்.
அவ்விரு குழந்தைகளும் 126 நாள்களுக்கு முன்னதாகவே, அதாவது 2022 மார்ச் 4ஆம் தேதி பிறந்தனர்.
பொதுவாக, முழுமையான கர்ப்ப காலம் 40 வாரங்களாக இருக்கும் நிலையில், ஏடியாவும் ஏட்ரியலும் 18 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்துவிட்டனர்.
கருவுற்று 21 வாரங்கள் ஐந்து நாள்களிலேயே திருவாட்டி ஷகினா ராஜேந்திரத்திற்கு மகப்பேற்று வலி ஏற்பட்டது.
திருவாட்டி ஷகினா கருவுற்றது இது இரண்டாம் முறை. அவர் முதல்முறை கருவுற்றிருந்தபோது, ஆன்டேரியோவில் உள்ள அதே மருத்துவமனையில்தான் அவர் தமது கருவை இழந்தார்.
இவ்வளவு விரைவில் மகப்பேறு ஏற்பட்டால் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, கண்களில் தாரை தாரையாக நீர்ப் பெருக்கெடுக்க, இரவெல்லாம் கண்விழித்து இறைவனை வேண்டியதாகக் குறிப்பிட்டார் குழந்தைகளின் தந்தையான திரு கெவின் நடராஜா.
22 வாரங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகப் பிறந்திருந்தால் அக்குழந்தைகளைக் காப்பற்றுவது கடினமாகியிருக்கும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது.
இதனையடுத்து, கடுமையான இரத்தப்போக்கு இருந்தபோதும் மேலும் சில மணி நேரத்திற்குத் தம் பிள்ளைகளை தம் வயிற்றினுள்ளேயே வைத்திருக்க தம்மாலான அளவு முயன்றார் திருவாட்டி ஷகினா.
அதனையடுத்து, 22 வாரங்களுக்கு இரண்டு மணி நேரம் பிந்தி அக்குழந்தைகள் தம் தாயின் கருவைவிட்டு வெளியில் வந்தன.
தொடக்கத்தில் கடுமையான மருத்துவப் பிரச்சினைகள் இருந்தபோதும், இரு குழந்தைகளும் ஓராண்டைக் கடந்து, அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடின.
2018ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஐயோவாவில் 125 நாள்களுக்கு முன்னதாகவே இரட்டையர்கள் பிறந்ததே முன்னைய சாதனை.