மும்பை: அற்ப காரணத்திற்காக இருதரப்பினர் கடுமையாக மோதிக்கொள்ள, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், அமல்னேர் நகரில் 48 மணி நேரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொம்மைகளுக்காக குழந்தைகள் சண்டையிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து இருதரப்பினர்க்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக வெடித்ததாகவும் ‘இந்தியா டுடே’ செய்தி கூறியது.
பின்னர் அது வன்முறையாக மாறி, இருதரப்பினரும் ஒருவர்மீது ஒருவர் கல்வீச்சில் இறங்கியதாகவும் சொல்லப்பட்டது.
இம்மோதல் இம்மாதம் 9ஆம் தேதி இரவு 10 மணியளவில் நிகழ்ந்தது. இதன் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு, 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்குச் சில நாள்களுக்கு முன்னர்தான் மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் வன்முறை வெடித்தது.
சமூக ஊடகத்தில் திப்பு சுல்தான் படத்துடன் வெளியான ஒலிப்பதிவால் அங்கு இனக்கலவரம் ஏற்படும் சூழல் உருவானது.
அதனை எதிர்த்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தி, நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
அவ்வன்முறைச் சம்பவம் தொடர்பாக இதுவரை குறைந்தது 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வன்முறையைத் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.