திருவனந்தபுரம்: உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவியர் மாதவிடாய் நாள்களில் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் வகையில் இந்தியாவின் கேரள மாநில அரசு அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
அதற்கேதுவாக, உயர்கல்வி நிலைய மாணவியருக்குத் தேவையான வருகைப்பதிவை 75 விழுக்காட்டில் இருந்து 73 விழுக்காட்டிற்குக் குறைத்து, அது அறிவித்தது.
இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட மாணவியர் கருத்தரிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரையிலும் மகப்பேற்று விடுப்பு அளிக்கப்படும் என்று கேரளப் பல்கலைக்கழகம் நேற்று திங்கட்கிழமை (06-03-2023) அறிவித்தது.
அப்படி மகப்பேற்று விடுப்பில் செல்லும் மாணவியர், அதன்பின் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்க அனுமதிப்பது என்று பல்கலைக்கழக ஆட்சிக்குழு முடிவுசெய்துள்ளது.
மகப்பேற்று விடுப்பில் சென்ற மாணவியரின் மருத்துவ ஆவணங்களைச் சரிபார்ப்பதும் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெறாமல் அவர்களைக் கல்லூரியில் மீண்டும் சேர்த்துக்கொள்வதும் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களின் பொறுப்பு என்று ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.
அப்பல்கலைக்கழகம் ஏற்கெனவே மாணவியருக்குத் தேவையான வருகைப்பதிவை 75 விழுக்காட்டில் இருந்து 73 விழுக்காடாகக் குறைத்துவிட்டது.