பழுப்பு மட்டையைப் பார்த்து குருத்து மட்டை சிரித்ததுபோல் வாழக்கூடாது என்கிறார் 70 வயது சுப்பிரமணியன்.
“வயதான காலத்தில் உறுதுணையாக மனைவி இருந்தாலும் ஆதரிக்க பிள்ளைகள் இருந்தாலும் உலகிற்கும் சரி, உறவுக்கும் சரி, ஊருக்கும் சரி யாருக்கும் சுமையாக வாழக்கூடாது. இதற்குக் கைத்தொழில்தான் கைகொடுக்கும்,” என்று சொல்லும் இந்தப் பெரியவர் முட்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
கீற்று முடைவது, மூங்கில் படல் போடுவது போன்ற வேலைகள் இவருக்குக் கைவந்த கலை. மற்ற வேலைகளையும் செய்வதுண்டு.
“வயதாக வயதாக ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடவேண்டும், சும்மா இருக்கவே கூடாது,” என்ற திரு மணியனுக்கு இரு மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் மணமாகி அவரவர் குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறார்கள்.
கிராமத்தில் பிரதான சாலை ஓரமாக இவரின் குடிசை வீடு இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெரிய குளம். திரு மணியன், அந்தக் குளத்தில் ஊறப்போட்டிருந்த தென்னங்கீற்றை மட்டையாக முடைந்துகொண்டு இருந்தார்.
“ஒரு நாளில் 30 தென்னை மட்டைகள், அதாவது அறுபது கீற்றுகள் முடைவேன்.
“ஒரு நாளில் 12 அடி நீளமுள்ள ஆறு மூங்கில் படல்களைப் போடுவேன்.
“மூங்கில் முள் வாங்கி படல்போட்டு ஒரு படல் ரூ.120 வரை விற்பேன். யாராவது கூப்பிட்டால் போவேன். ஒரு படல் போட்டுக் கொடுக்க ரூ. 60 கூலி தருவார்கள். படிச்செலவு தனி.
“கீற்று முடைய சம்பளத்திற்குக் கூப்பிடுவார்கள். ஆனால் ரூ.300தான் ஊதியம் கொடுப்பார்கள். அது கட்டுப்படியாகாது. ஆகையால், மட்டை முடைய கூலி வேலைக்குச் செல்வதில்லை,” என்றார் திரு மணியன்.
“மட்டைகளைத் தலா இரண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்கு வாங்கி குளத்தில் இரண்டு நாள் ஊறவைத்து முடைந்து ஒரு மட்டை 10 ரூபாய்க்கு விற்பேன். நான் வசிக்கும் குடிசை வீட்டிற்குத் தேவையான கீற்றுகளை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்று நானே முடைந்து வேய்ந்துவிடுவேன்.
“குடிசை வீடுகள் மறைந்து வருகின்றன. அதனால், வீடுகளைப் பொறுத்தவரை கீற்றுக்குத் தேவை குறைந்துவிட்டது. கோயில் திருவிழாக்கள், திருமணம், வீட்டு நிகழ்ச்சிகள், பந்தல், கொட்டகை போன்றவற்றுக்குக் கீற்று தேவைப்படுகிறது. தென்னங்கீற்றைப் பொறுத்தவரை இளம் மரத்துக் கீற்றுதான் சரிப்பட்டுவரும். கீற்றில் ஒவ்வோர் ஓலையும் சுருங்காமல் இருக்கும்.
“ஊறவைத்து முடையும்போது கீற்று அகலமாக இருக்கும். முதிய மரத்தின் கீற்றுகள் சுருங்கி இருக்கும்.
“வீடுகளிலும் நிரந்தரமாகப் போடப்படும் கொட்டகைகளிலும் நெருக்கமாகக் கீற்றை வேய்ந்தால் ஆண்டுக்கணக்கில் அப்படியே இருக்கும். கோடையில் குடிசை வீட்டில் இயற்கையிலேயே வெப்பம் குறைவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது,
“ஆனால், அடிக்கடி கீற்றை மாற்ற வேண்டும்; பராமரிக்க வேண்டும். இந்தக் காலத்தில் கூரை வீட்டை அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை. அதிகம் மெனக்கட வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம்.
“கிராமப்புறங்களில் மூங்கில் படலுக்கு இன்னும் கிராக்கி இருக்கிறது.மூங்கில் குத்தில் முள்ளை அறுத்து எடுத்து படல் போடுவது என்பது மிகவும் சிரமமான ஒரு தொழில்.
“பொதுவாக மூங்கில் குத்து உரிமையாளர்கள் முள்ளை வெட்டிக்கொள்ளச் சொல்வார்கள்; வெட்டி விற்க மாட்டார்கள். யாருக்குத் தேவையோ அவர்கள்தான் வெட்டி படல் போட வேண்டும். அப்படி முள்ளை வெட்டி படல் போடுவோர் என்னை வேலைக்குக் கூப்பிடுவார்கள்,” என்றார் திரு மணியன்.
“வயிறு கள்ளு கொள்ளும். படல் முள்ளு கொள்ளும் என்று ஒரு வழக்குமொழி உண்டு. படலில் எவ்வளவு முள் வேண்டுமானாலும் சேர்த்து கட்டிக்கொண்டே இருக்கலாம்.
“தென்னம்பாளையை ஊறவைத்து கிழித்து அதைக் கொண்டுதான் படல் போடுவது வழக்கம். இப்போது பிளாஸ்டிக் கயிறு வந்துவிட்டது. அதைப் பயன்படுத்துகிறார்கள்.
“இளம் வயதில் கடும் உடல் உழைப்பு தேவைப்படக்கூடிய வேலைகளுக்குச் சென்ற காலம் எல்லாம் உண்டு. இப்போது வயதுக்கு ஏற்ற தொழில்களைத் தேர்ந்து எடுத்துக்கொண்டேன்.
“என் பிள்ளைகளைச் சார்ந்து இருக்கவே மாட்டேன். என் மனைவியும் இப்படித்தான்,” என்று கூறிய திரு மணியனுக்குக் கொஞ்சம் காது கேட்காது. சற்று உரக்கப் பேச வேண்டி இருக்கிறது.
“வெளியூர்களில் இருந்து கீற்று வாங்கிச் செல்ல வருவார்கள். அவர்களிடம் மொத்தமாக விற்றுவிடலாம்; சில்லறைக்கும் விற்கலாம். கீற்று முடைவது, படல் போடுவது என்று பாடுபட்டு நாள் ஒன்றுக்குச் சராசரியாக ரூ.400 முதல் ரூ.500வரை சம்பாதிக்கிறேன்,” என்று கூறிய திரு மணியனிடம் வாழ்க்கை மனநிறைவாக, மனமகிழ்ச்சியாக இருக்கிறதா என்று கேட்டேன்.
“தென்னை மட்டையில்கூட இளம் மரத்து இளம் மட்டைகள்தான் கீற்றுக்கு அதிகம் விரும்பப்படும். அதேபோல்தான் நாமும். வயதாக ஆக நமது தேவை குறையும். இது இயல்புதான்.
“என்றாலும், ஏதாவது ஒரு வழியில் எப்போதும் தேவைப்படக்கூடியவராக நம்மை நாம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.
“நம் கையில் காசு இருந்தால்தான் ஈ, எறும்புகூட நம்மை மதிக்கும். மனைவியிடத்திலும் மக்களிடத்திலும் நமக்கு கௌரவம் இருக்கும்.
“என் போன்ற பாமர மக்களைப் பொறுத்தவரை உழைப்பைவிட்டால் வேறு வழியில்லை. பழுத்த மட்டையைப் பார்த்து குருத்து மட்டை சிரித்ததைப்போல் எந்த ஒரு காலத்திலும் வாழவே கூடாது. இப்படி நாளும் உழைத்து வாழ்வதால் என் வாழ்க்கை மனநிறைவாக மகிழ்ச்சியானதாக இருக்கிறது,” என்றார் திரு மணியன்.