கட்டடங்கள் அடர்ந்த நகர்ப்புறச் சூழலில் பூங்காக்களும் இதர பசுமையான இடங்களும் கண்களுக்குக் குளிர்ச்சி தருவதோடு வெப்பத்தைச் சமாளிக்கவும் கைகொடுக்கின்றன. மன அமைதியைத் தூண்டும் அத்தகைய இடங்கள் பல்லுயிர்ச் சூழலைக் கட்டிக்காக்க உதவுவதையும் நாம் அறிவோம்.
ஆனால், பசுமையான இடங்களுக்கு அருகில் வசிப்போர் அவ்வாறு அல்லாதோரைக் காட்டிலும் உடலியல் ரீதியாக இளமையாக இருப்பர் என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் வெளியாகும் ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ எனும் அறிவியல் சஞ்சிகையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
பசுமை நிறைந்த சூழலில் வசிப்போர் உண்மையான வயதைவிட சராசரியாக இரண்டரை வயது குறைந்து இளமையாக இருப்பர் என்கிறது அந்த ஆய்வு.
தங்கள் கண்டுபிடிப்பு, நகர்ப்புறங்களில் பசுமையான உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான திட்டமிடலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் உடல்நலம் தொடர்பான இடைவெளிகளைக் குறைக்கவும் அது கைகொடுக்கும் என்பதை அவர்கள் சுட்டினர்.
பசுமையான சூழலில் வசிப்பது அல்லது அங்கு அடிக்கடி சென்றுவருவது போன்றவற்றுக்கும் இதய நலத்திற்கும் குறைவான மரண விகிதத்திற்கும் தொடர்பு உண்டு என்று ஏற்கெனவே சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய இடங்களில் உடலியக்க நடவடிக்கைகளும் சமூக அளவில் பிறருடன் பேசிப் பழகுவதும் அதிகரிப்பது அதற்குக் காரணம் என்று கருதப்பட்டாலும் பூங்காக்கள் உயிரணு அளவில் மூப்படைதலை மெதுவாக்குமா என்று இதற்குமுன் தெளிவான தகவல் இல்லை.
1986ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் நான்கு நகரங்களில் வாழும் ஏறத்தாழ 900 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர்களில் வெள்ளை, கருப்பின மக்கள் என இருதரப்பினரும் அடங்குவர்.
பங்கேற்றோரின் வீடுகளுக்கு எவ்வளவு அருகில் பசுமையான இடங்கள் அமைந்திருக்கின்றன என்ற தகவலுடன் அவர்களின் கல்வித்தகுதி, வருவாய், புகைபிடித்தல் உள்ளிட்ட பழக்கங்கள் போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டன.
ஐந்து கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் 30 விழுக்காடு பசுமையான இடங்கள் உள்ள வீடுகளில் வசிப்போர், 20 விழுக்காடு பசுமையான இடங்களைக் கொண்டிருக்கும் வீட்டில் வசிப்போரைவிட உடலியல் ரீதியாக சராசரியாக இரண்டரை வயது குறைந்து இளமையுடன் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால் கருப்பினத்தவரில் அந்த வித்தியாசம் ஒரு வயதாகவும் வெள்ளை இனத்தவரில் மூன்று வயதாகவும் பதிவானதாக ஆய்வாளர்கள் கூறினர். மனஅழுத்தம், பசுமைச் சூழலின் தரம் போன்ற அம்சங்களும் மூப்படைதலைத் தள்ளிப்போடுவதில் தாக்கம் ஏற்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.