சிறுவர்களுக்கு எண்ணங்களின் முக்கியத்துவத்தை கூறும் நூல்

3 mins read
1b8305c9-12f1-4dd5-a2b5-a03bc23e9348
கதைப்புத்தகம் - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 2

சிறுவர்கள் புரிந்துகொள்ளும் நடையில் எளிதான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகத் தெளிவான கருத்துகளோடும் ஒன்பது தலைப்புகளோடும் பிறந்துள்ளது ‘எண்ணம் வானவில்லின் வண்ணம்’ எனும் ஒரு கதைப்புத்தகம்.

ஏழு வயதிலிருந்து 13 வயது வரையிலான சிறுவர்கள் படித்து மகிழும் இப்புத்தகமானது மனதின் எண்ணங்கள் அனைத்தையும் மையமாக வைத்து எழுதப்பட்டது.

எண்ணங்களுக்கு இடையேயான வித்தியாசங்களை விளக்கி எழுத்தாளர் தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் ஒன்றிணைத்து சிறுவர்கள் புத்தகத்தை படித்து கருத்துக்களை அறிந்துகொள்ளும் விதத்தில் பழமொழிகளையும், திருக்குறள்களையும் கதைகளில் இடம்பெறச் செய்துள்ளார்.

எண்ணம், எண்ணத்தின் அணிகலன்கள், இரக்கம், பணிவு, அன்பு, நேர்மை, நேர்மறை சிந்தனை, தெளிவு, துணிவு போன்றவற்றை உள்ளடக்கியுள்ள இந்தப் புத்தகம் எண்ணங்களை பேணுவதன் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க முற்படும்.

புத்தகத்தின் எழுத்தாளரான வை. விஜயலட்சுமி (படம்), 49, கடந்த 25 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வந்த இவர் தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

தமிழ்மொழி மீது பேரார்வம் கொண்ட விஜயலட்சுமி பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தமிழில் கையெழுத்திட்ட தருணத்தை நினைவுகூர்ந்தார்.

பாரதியார் கவிதைகளை ஆர்வத்துடன் படித்து வளர்ந்த இவர் அதிகம் படக்கதைகளை வாசித்து வந்தார். தமிழ் கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் தொடங்கிய இவரது மொழியார்வம் பின்னர் இவரின் பல்கலைக்கழக பேராசிரியர் சரோஜினியால் மேலும் வளர்ந்தது.

சிங்கப்பூர் வந்ததும் தனது மகனை கவனிப்பதிலும் வேலைக்குச் செல்வதிலும் நேரத்தை செலவிட்டு வந்தார் விஜயலட்சுமி.

நேரம் கிடைக்கும்போது தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பள்ளிகளில் நடைபெறும் திருக்குறள் போட்டிகளுக்கு நடுவராக செல்வது போன்ற சிறிய பங்களிப்புகளை மொழிக்கு வழங்கி வந்தார். தற்போது மகனுக்கு 22 வயது ஆகிவிட்ட நிலையில் விஜயலட்சுமிக்கு நேரம் அதிகம் கிடைப்பதால் தமிழ்மொழிக்கு அதை ஒதுக்கி வருகிறார்.

தமிழ்மொழிக்கு செலுத்தும் அதே ஆர்வம் இவர் குழந்தைகள் மீதும் செலுத்துகிறார். குழந்தைகளின் களங்கமின்மை, அவர்களிடம் தென்படும் நேர்மறையான உணர்வு விஜயலட்சுமியை கவர்ந்துள்ளது. மகனின் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளுக்கு முன்பு தொண்டூழியராக சென்ற விஜயலட்சுமிக்கு தன்னை சுற்றி குழந்தைகளாக இருந்தது மிகவும் பிடித்திருந்தது. அவ்வாறு சிறுவர்களுடன் இணைய இவருக்கு புத்தகம் எழுதும் யோசனை பிறந்தது.

வழக்கமாக சிறுவர் புத்தகங்கள் என்றாலே நமக்கு முதலில் தோன்றுவது விலங்குகளைப் பற்றிய கதைகள் தான். தனது கதை மாறுபட்ட பாணியில் அமைய வேண்டும் என்பதற்காக சிறுவர்கள் இவரின் கதையைப் படிக்க வேண்டும் என்பதைவிட அவர்கள் ஒரு தமிழர் என்ற அடையாளத்தை பெருமையாக உணர வேண்டும் என்பதை ஊக்குவிக்க முனைந்தார்.

ஔவையார், திருவள்ளுவர் போன்ற ஆளுமைகளின் சிறப்பை தெரிந்துகொண்டு அவர்களிடமிருந்து வாழ்க்கை விழுமியங்களை சிறுவர்கள் பெற வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டார் விஜயலட்சுமி.

எண்ணம்தான் ஒருவரின் அடையாளம் எனும் விஜயலட்சுமி, மனதின் வலிமையை சிறுவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை தன்னுடைய கதைகளில் முன்னிறுத்தியுள்ளார். தன் கருத்தை கேட்டு முன்பு ஒருமுறை உந்தப்பட்ட நண்பர் ஒருவரின் தூண்டுதலில் விஜயலட்சுமி புத்தகத்தை மூன்று மாதங்களில் எழுதி முடித்தார்.

முதல் பதிப்பாக அவர் 1000 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அடுத்து புத்தகத்தின் இரண்டாவது பதிப்பாக விஜயலட்சுமி சொல்லை ஒரு உணர்ச்சியாக முன்னிலைப்படுத்தி எழுதவுள்ளார்.

அண்மையில் தமிழகத்திலிருந்து கல்வி சுற்றுலாவுக்காக சிங்கப்பூருக்கு வருகை புரிந்த 25 தமிழ் மாணவர்களுக்கு விஜயலட்சுமி தனது புத்தகத்தை இலவசமாக பரிசளித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்