தீபாவளிக் கொண்டாட்டத்தில் சிறப்புத் தேவை உடையோரும் ஈடுபடவேண்டும் என்ற உன்னத நோக்குடன் தொண்டூழியரணி ஒன்று திரண்டுவந்தது.
தொண்டூழியர்கள் ‘எஸ்பிடி’ (Serving People with Disabilities) கீழ் இயங்கிவரும் பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தில் உள்ள சிறப்புத் தேவையுடையோரைச் சந்திக்க நவம்பர் 7ஆம் தேதி சென்றிருந்தனர். ‘பிலீவ் டு சக்சஸ்’ (Believe To Success) சமூக அமைப்பின் எட்டு தொண்டூழியர்கள் இத்திட்டத்தில் இணைந்திருந்தனர்.
‘பிலீவ் டு சக்சஸ்’ சமூக அமைப்பு மாதந்தோறும் சிறப்புத் தேவையுடையோர் தங்கள் வாழ்க்கைக் கதைகளை இணையவழி பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. பண்டிகைக் காலங்களில் நேரடியாகவும் சென்று உதவுகிறது.
இம்முறை நடந்த தீபாவளி நிகழ்ச்சியில் ஆடல் பாடல் அங்கங்களும் சுவாரசியமான விளையாட்டுகளும் இடம்பெற்றன. வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பங்குபெற்ற 40 சிறப்புத் தேவையுடையோருக்கும் மேலும் சில ‘எஸ்பிடி’ பயனாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் மொத்தம் 70 பலகாரப் பைகளைத் தொண்டூழியர்கள் வழங்கினர். ‘பிருந்தாஸ்’ உணவகம் ஆளுக்கு $20 பற்றுச்சீட்டையும் வழங்கி ஆதரித்தது.
நிகழ்ச்சி முடிவடைந்ததும் ‘எஸ்பிடி’ சுற்றுலா நடைபெற்றது.
‘எஸ்பிடி’யின் தொழிற்சாலைக்குச் சென்ற தொண்டூழியர்கள், சிறப்புத் தேவையுடையோருக்கு ‘எஸ்பிடி’ வழங்கும் தொழில்ரீதியான பயிற்சிகளை அறிந்துகொண்டனர்.
சிறப்புத் தேவையுடையோரைப் பராமரிப்போர், தங்களுக்கென நேரம் செலவிடவும் முழுநேர வேலையில் பணியாற்றவும் ‘எஸ்பிடி’ முக்கியப் பங்காற்றுகிறது.
வாரநாள்களில் தொடர்ச்சியாக வந்து உதவும் தொண்டூழியர்கள், சிறப்புத் தேவையுடையோருக்கு மகிழ்ச்சியை வித்திடும் ஆதரவாளர்கள் ஆகியோர் தேவை என்று கூறியது ‘எஸ்பிடி’.
தன் தொழிற்சாலையில் பணியாற்றுவோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் அமைப்புகளையும் தேடுகிறது ‘எஸ்பிடி’. அவர்களில் பலரும் தையல், கைவினைப் பொருள்களைச் செய்வதில் வல்லவர்கள்.
மேல்விவரங்களுக்கு: http://spd.org.sg/ மற்றும் believetosuccess.com இணையத்தளங்களை நாடலாம்.
நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளர் ஹாஜா ஜஃபருல்லாஹ், வாழ்வின் எதார்த்தத்தை இந்நிகழ்ச்சி மூலம் உணர்ந்ததாகத் தெரிவித்தார்.