முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளுடன் 1எம்டிபி ஊழலை மறைக்க சதி செய்ததாகக் கூறப்படும் குரல் பதிவுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எனப்படும் எம்ஏசிசி வெளியிட்டது.
2016ஆம் ஆண்டின் பல உரையாடல்களை ஆணையம் வெளியிட்டது. அவை அன்றைய பிரதமரான நஜிப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மாநில முதலீட்டு நிறுவனமான 1எம்டிபிலிலிருந்து காணாமல் போன நிதியை மறைக்கும் நோக்கில் விசாரணைகள், பிற மோசடி செயல்களைக் கையாளும் முயற்சியைக் காட்டியது.
கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் பிஎன் கூட்டணி அரசாங்கம் தோற்றதால் பதவியை இழந்த நஜிப், 1எம்.டி.பி தொடர்பான 42 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
ஆனால் அவரது சட்டக் குழு இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. நஜிப், தப்பியோடிய நிதியாளர் லோ டெக் ஜோவால் பாதிக்கப்பட்டவர் என்று கூறியது.
அனைத்து உரையாடல்களும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்திற்கு இடையில் நடைபெற்றுள்ளன.
தடயவியல் விசாரணைக்குப் பின்னர், இப்பதிவுகள் உண்மையானது, திருத்தப்படாதது என்று கண்டறியப்பட்டதாகவும் புத்ராஜெயாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் எம்ஏசிசி தலைவர் லத்தீபா கோயா தெரிவித்தார்.
அதிகார துஷ்பிரயோகம், சதித்திட்டம், தவறான ஆதாரங்களை இட்டுக்கட்டுதல், அரச ரகசியங்களைக் கசியவிடுவது போன்ற குற்றங்களை இந்த பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன என்றார்.
ஆனால் இந்த ரகசிய உரையாடல் பதிவுகள் தனக்கு எப்படி கிடைத்தது என்று அவர் கூறவில்லை.
இந்த பதிவு பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படுவதாகவும், மேலும் இது குறித்து மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல் துறைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity