மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மலேசியாவின் முன்னைய பிரதமர் மகாதீர் முகமது இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக அவரது மகள் மரீனா மகாதீர் கூறியுள்ளார்.
டாக்டர் மகாதீர் தமது குடும்பத்தினருடன் 'தொடர்பு கொண்டதாக' அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
டாக்டர் மகாதீரின் உடல்நிலை குறித்த அதிகாரபூர்வமற்ற வட்டாரங்கள் பரப்பும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் திருவாட்டி மரீனா வலியுறுத்தினார்.
டாக்டர் மகாதீரின் உடல்நிலை குறித்து மலேசியாவின் தேசிய இதயநோய் சிகிச்சை நிலையம் அவ்வப்போது மேல்விவரம் தரும் என்றும் அவர் கூறினார்.
96 வயது டாக்டர் மகாதீர், சனிக்கிழமை (ஜனவரி 22) அன்று நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்தில் அவர் மூன்றாவது முறையாக தேசிய இதயநோய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் மகாதீரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு நினைவுதிரும்பி பேசியதாகவும் உத்துசான் எனும் மலாய் செய்தித்தாள் பெயர் குறிப்பிடப்படாத நெருக்கமான வட்டாரத்தை மேற்கோள் காட்டி கூறியது.
டாக்டர் மகாதீர் இதயசிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சனிக்கிழமை மாலை டாக்டர் மகாதீரை மருத்துவமனையில் சென்று பார்த்ததை அடுத்து, முன்னைய பிரதமரின் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவின.
இந்நிலையில் மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா தேசிய இதயநோய் சிகிச்சை நிலையத்தில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலப் பரிசோதனைக்காகவும் காலில் சிகிச்சை பெறுவதற்காகவும் அவர் சேர்க்கப்பட்டதாக மலேசிய அரசமாளிகை தெரிவித்தது.
மாமன்னர் சில நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று அரசமாளிகை கூறியது.