மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் மெர்சிங்கில் நிகழ்ந்த சாலை விபத்தில் 57 வயது சிங்கப்பூரர் படுகாயம் அடைந்தார்.
ஜாலான் மெர்சிங்-ஜெமாலுவாங்கில் வேன் வாகனமும் 10 டன் லாரியும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 7) விபத்துக்கு உள்ளானதில் மற்றொருவர் இறந்துவிட்டதாகவும் பெர்னாமா தெரிவித்தது.
சிங்கப்பூர் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த மெகாட் ஓமர் இஸ்மாயில் என்ற அந்த சிங்கப்பூரர் விபத்தில் கடுமையான காயமுற்றார்.
அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவைச் சேர்ந்த முகம்மது ஷாஸ் முகம்மது சையது, 60, என்பவர் சம்பவ இடத்திலேயே மாண்டுபோனதாகக் கூறப்பட்டது.
விபத்தில் சிக்கிய லாரியை ஓட்டிய முகம்மது ஃபாஸ்லி பாய்ரி, 48, என்பவருக்குக் காயம் ஏதுமில்லை.
விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.53 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் உடனே தீயணைப்பு வாகனமும் ஒன்பது பேரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் மெர்சிங் தீயணைப்பு, மீட்புத் துறையைச் சேர்ந்த முகம்மது சைனுதீன் என்ற அதிகாரி கூறினார்.
வேனில் சிக்கிக்கொண்ட இரண்டு பேரும் சிறப்புச் சாதனங்களின் உதவியுடன் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.