பாரிஸ்: பருவநிலை மாற்றத்தால் உலகில் உயிரினங்கள் வாழ்வதே கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதாக முன்னணி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாண்டு வெப்பநிலை பலமுறை வரலாறு காணாத அளவில் அதிகமாகப் பதிவானது. பல வேளைகளில் பருவநிலை என்றும் இல்லாத வகையில் மோசமாக இருந்து வந்துள்ளது. இவற்றைக் கருத்தில்கொண்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
2023ஆம் ஆண்டு ஆக வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல்வேறு இடங்கள் படுமோசமான அனல் காற்றை எதிர்நோக்கியிருக்கின்றன.
சில இடங்கள் குறுகிய காலத்தில் பெரிதும் மாறுபட்ட பருவநிலையை அனுபவித்திருக்கின்றன.
உலகம் இவ்வாறு வெப்பமடைவதைத் தடுக்க மனித குலம் அதிக முன்னேற்றம் காணவில்லை என்று பையோசையன்ஸ் எனும் அறிவியல் சஞ்சிகையில் செவ்வாய்க்கிழமையன்று வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்துலக அளவிலான விஞ்ஞானிகள் குழு அந்த அறிக்கையைத் தயார்படுத்தியது.
இதனால் உயிரினங்கள் வாழ்வதே கேள்விக்குறியாக மாறும் அபாயத்தைச் சுட்டிய விஞ்ஞானிகள், பருவநிலை நெருக்கடியை சாதாரண சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டும் பாராமல் அதை வாழ்க்கைக்கும் வாழ்க்கை முறைக்கும் மிரட்டல் விடுக்கும் ஒன்றாகப் பார்ப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.