உள்துறை, சட்ட அமைச்சர் சண்முகம், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் ஆவதற்கு முன்னர் திரு தர்மன் சண்முகரத்னம் வகித்த பொறுப்பு இது.
சிண்டா, 1991ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது முதல், அமைச்சர் கா சண்முகம், சிண்டாவுடன் தொடர்பில் இருந்துவருகிறார்.
2010 முதல் சிண்டாவின் ஆயுட்கால அறங்காவலராக அவர் இருந்துள்ளார். 1991 முதுல் 2002 வரை சிண்டாவின் ஆலோசகராக இருந்த திரு சண்முகம், 2002லிருந்து 2009 வரை அதன் செயற்குழுத் தலைவராகப் பணியாற்றினார்.
சவாலான காலகட்டங்களில் சிண்டாவின் செயற்குழுவைச் சிறப்பாக வழிநடத்தியவர் திரு சண்முகம். எடுத்துக்காட்டாக, பொருளியல் மந்தம், 2003ல் ஏற்பட்ட சார்ஸ் நோய்ப் பரவல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
அந்தக் காலகட்டங்களில், சிண்டா மேற்கொண்ட பணி அமர்த்துதல், வேலைப் பயிற்சி போன்ற ஆதரவு நடவடிக்கைகளின்மூலம் 2,000க்கு மேற்பட்ட இந்தியர்கள் பலனடைந்தனர்.
மேலும், வசதிகுறைந்த குடும்பங்களும் பிள்ளைகளும் பயன்பெறும் வகையில் 2008ஆம் ஆண்டு அவர்களுக்கு நிதி ஆதரவு அளிக்கும் ‘பேக் டூ ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ எனும் திட்டத்தைத் தொடங்கும் சிண்டாவின் முயற்சிகளுக்கு திரு சண்முகம் தலைமை வகித்தார்.
இதற்கு முன்னர் இந்த அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த திரு தர்மன் சண்முகரத்னம், 15 ஆண்டுகள் அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
அவரது தலைமைத்துவத்தின்கீழ், சிங்கப்பூர் இந்தியச் சமுதாயத்தின் மேம்பாட்டில் சிண்டா முக்கியப் பங்கு வகித்துள்ளது.
2011ல் திரு தர்மனின் வழிகாட்டுதலின்கீழ், சிண்டாவின் உத்திபூர்வ மறுஆய்வுத் திட்டம் வகுக்கப்பட்டது. கல்வி, இளையர்கள், குடும்பச் சேவைகள் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தும் இலக்குகள் வகுக்கப்பட்டன. அந்த மறுஆய்வை அடுத்து முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் முக்கியப் பங்களித்தன.
திரு தர்மனின் தலைமைத்துவத்தின்கீழ், சிண்டா சமுதாயத்திற்குப் பெரிய அளவில் சேவையாற்றியது என்று சிண்டாவின் தலைவரும், பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறினார். திரு தர்மனின் பங்களிப்பிற்கு சிண்டா சார்பிலும் இந்திய சமூகத்தின் சார்பிலும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும், “அமைச்சர் கா சண்முகம், சிங்கப்பூர் இந்திய சமுதாயத்துடன் வலுவான பிணைப்பைக் கொண்டவர்.
“திரு சண்முகத்திற்கு சிண்டாவைப் பற்றிய ஆழ்ந்த புரிதல் உண்டு. சிண்டாவை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் திறன் அவருக்குண்டு,” என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.