திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக செல்கின்றனர்.
அவ்வாறு வரும் ஐயப்ப பக்தர்கள் அங்குள்ள உணவகங்களில் சாப்பிடும் போது, அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் வந்தன.
புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அணில் கே.நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து இப்பிரச்சினையை விசாரித்தது.
“சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு வரும் பக்தர்களிடம் உணவகங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. இதுகுறித்து எருமேலி, ராணி, பெருநாடு கிராம ஊராட்சிகள் விசாரித்து, சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு சார்பில் பறக்கும் படை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு, பக்தர்களுக்கு நியாயமான விலையில் உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சபரிமலைக்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.