புதுடெல்லி: பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.1.1 கோடி (S$178,800) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் நீண்டதொலைவிற்கு இயக்கப்படும் சில விமானங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவதாக ஏர் இந்தியா ஊழியர் ஒருவரே புகார் அளித்தார்.
இதனையடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் அப்புகாரை விசாரித்தது.
அதில், ஏர் இந்தியா விமான நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கி நடக்காதது கண்டறியப்பட்டது. அதன் தொடர்பில், அந்நிறுவனத்திற்குக் காரணம் கேட்புக் குறிப்பாணை அனுப்பப்பட்டது. இறுதியில், அதன்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது ஒரே வாரத்தில் இது இரண்டாம் முறை. முன்னதாக, முறையான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் விமானச் சேவைகள் தாமதமடைந்ததாகக் கூறி, விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 18) அந்நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது.