இந்த ஆண்டுக்கான கூட்டு மாணவர் சேர்க்கை முடிவுகள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
மாணவர்கள் முடிவுகளை குறுந்தகவல் வழி பெறலாம். அல்லது ஜேஏஇ இணைய அமைப்பு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
தொடக்கக் கல்லூரி அல்லது மில்லெனியா கல்விநிலையத்தில் இடம் கிடைத்த மாணவர்கள் பிப்ரவரி 2ஆம் தேதி காலையில் அந்தந்தக் கல்வி நிலையத்துக்குச் சென்று பதிந்துகொள்ள வேண்டும்.
தகுந்த காரணங்களுக்காக பள்ளியின் முதல் நாளில், இடம் கிடைத்த கல்வி நிலையத்துக்குச் செல்ல முடியாதவர்கள், தங்கள் கல்வி நிலையத்தைத் தொடர்பு கொண்டு இடத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு வியாழக்கிழமை (ஜனவரி 25) தெரிவித்தது.
பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இடம் கிடைத்தவர்கள் தங்கள் சேர்க்கை விவரங்களை மின்னஞ்சல் அல்லது அஞ்சல் வழியாக பிப்ரவரி இறுதிக்குள் பெறுவார்கள்.
வேறொரு தொடக்கக் கல்லூரி அல்லது மில்லெனியா கல்வி நிலையத்துக்கு மாற மேல்முறையீடு விரும்புவோர், தாங்கள் தேர்வு செய்த கல்வி நிலையத்தை நேரடியாக தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள வேண்டும் என்று அமைச்சு கூறியது.
“இடம் இருந்தால், விண்ணப்பதாரர் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான புள்ளிகளைப் பெற்றிருந்தால், விண்ணப்பங்களை கல்வி நிலையம் முடிவு செய்யும்” என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் இணையப்பக்கத்தில் தொடக்கக்கல்லூரிகள், மில்லெனியா கல்விக் கழகத்தின் தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரிகளைக் காணலாம்.
பலதுறைத் தொழிற்கல்லூரி அல்லது ஐடிஇ ஈராண்டு உயர் நைடெக் படிப்புக்கு மாற்றம் செய்ய மேல்முறையீடு செய்ய விரும்புவோர் ஜேஏஇ இணைய மேல்முறையீட்டுத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பிப்ரவரி 1ஆம் தேதி காலை 9 மணி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி மாலை 4 மணி வரை அந்த இணையவாசலில் விண்ணப்பிக்கலாம்.
பிப்ரவரி 21ஆம் தேதி காலை 9 மணிக்கு அதே இணையப்பக்கத்தில் முடிவுகள் வெளியிடப்படும்.