பெய்ரூட்: லெபான் மீது முழு அளவிலான தாக்குதல் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கதை முடிந்துவிடும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார்.
“லெபனான் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த சியோனிச ஆட்சி (இஸ்ரேல்) எடுக்கும் எந்த நடவடிக்கையும் நெட்டன்யாகுவின் முடிவாக இருக்கும்,” என்று பெய்ரூட் பயணத்தின்போது பிப்ரவரி 10ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர் தெரிவித்தார்.
காஸா போர் குறித்த எல்லை தாண்டிய பதற்றங்கள் அதிகரித்துள்ள வேளையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஹஸ்புல்லா, ஹமாஸ் உட்பட அப்பகுதியில் உள்ள பல ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் ஈரானின் வெளியுறவு அமைச்சர், பெய்ரூட்டுக்கு மூன்றாவது முறையாகப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
“சியோனிச ஆட்சி ஒருபோதும் இரு முனைகளில் போராட முடியாது என்பதே எங்கள் மதிப்பீடு,” என்ற அவர், “காஸா புதைகுழியிலிருந்து வெளியேற நெட்டன்யாகு போராடி வருகிறார்,” எனச் சொன்னார்.
முன்னதாக, “காஸாவின் முன்னேற்றங்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்கின்றன, ஆனால் நெட்டன்யாகு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போரில் தீர்வை தேடுகிறார்,” என்று அமீர் அப்துல்லாஹியானை மேற்கோள் காட்டி, சனிக்கிழமையன்று ஈரானிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை சுட்டியது.