சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திங்கட்கிழமை (பிப்ரவரி 19) தாக்கல் செய்தார்.
கிட்டத்தட்ட 2.07 மணி நேரம் உரையாற்றிய தங்கம் தென்னரசு, நாட்டின் அனைத்து தளங்களில் பெருவளர்ச்சி பெற்று தமிழகம் முத்திரை பதித்துள்ளதாகக் கூறினார்.
நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, முதன்முறையாக திரு தங்கம் தென்னரசு பல்வேறு புதிய திட்டங்களையும், விரிவாக்கத் திட்டங்களையும் அறிவித்தார்.
வரவுசெலவுத் திட்டத்தில் நிதிப்பற்றாக்குறை ரூ.94,060 கோடியாக உயரும் என்றும் மூலதன செலவினங்கள் ரூ.47,681 கோடியாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கணிக்கப்பட்டதைக் காட்டிலும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
2024-25 வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் தமிழகத்தின் மொத்த வரவுசெலவுத் திட்ட நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44% ஆகும்.
இந்த நிதியாண்டில் மருத்துவத் துறைக்கு ரூ.20,198 கோடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.440 கோடி, உயர் கல்வித் துறைக்கு ரூ.8.212 கோடி, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.44,042 கோடி, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களை கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் உயர்கல்வி செலவை முழுமையாக அரசு ஏற்கும் எனக் கூறப்பட்டது.
திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை, சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.24,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.20,043 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.578 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மதுரையில் ரூ.345 கோடியிலும் திருச்சியில் ரூ.350 கோடியிலக்கும் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். மேலும், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் நியோ தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா அமைக்கப்படும். மதுரையில் 25,000 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்.
4 நகரங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் நிறுவப்படும். விருதுநகர், சேலத்தில் ரூ.2,483 கோடி செலவில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்றும் வரவுசெலவுத் திட்டத்தில் கூறப்பட்டது.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி, கோவையில் பிரம்மாண்ட நூலகம் போன்ற பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டது.
1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் திருப்பரங்குன்றம் , திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களை புனரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.