புக்கிட் பாஞ்சாங்கில் சனிக்கிழமை (மார்ச் 16) ஒரு காரும் இரு தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களும் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமுற்ற 68 வயது மாது ஒருவர், சுயநினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
லேசாக காயமுற்ற மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி கடுமையான காயம் விளைவித்த 32 வயது ஆண் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புக்கிட் பாஞ்சாங் ரிங் சாலை, செகார் சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து மாலை 4.15 மணியளவில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் கிடைத்தது.
சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களில் ஒன்றில், தரையில் கிடந்த ஒருவருக்கு மருத்துவ உதவியாளர்கள் நால்வரும் காவல்துறை அதிகாரிகள் இருவரும் உதவுவது தெரிந்தது.
ஷின் மின் சீன நாளிதழின் செய்திக்குழு ஞாயிற்றுக்கிழமை காலை விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்றபோது, தரையில் ரத்தக் கறை காணப்பட்டது.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.