வீட்டிற்கு வெளியே விளிம்புச் சுவர் கம்பியில் காயப்போட்டிருந்த காற்சட்டைகளை பெண் ஒருவர் களவாடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சிராங்கூன் வட்டாரத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழ்ந்த இச்சம்பவம், கதவில் பொருத்தியிருந்த படக்கருவியில் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் ஸ்டோம்ப் இணையத்தளம் வழியாக அக்காணொளியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நன்றாக வெயிலடித்ததால் வெளியில் எனது காற்சட்டைகளைக் காயப்போட்டிருந்தோம். பெண் ஒருவர் அவற்றை மேலிருந்து கீழே தள்ளிவிட்டார். அது குறித்து என் மகன் என்னிடம் விழிப்பூட்டினான். 15 நிமிடங்களுக்குப் பிறகு நான் கீழே சென்று பார்த்தபோது அந்தக் காற்சட்டைகளைக் காணவில்லை,” என்றார் ‘எம்எஃப்’ என்ற அந்த ஸ்டோம்ப்வாசி.
சில நேரங்களில் தம் வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுச் செல்லப்பட்ட பொதிகளை எடுத்துச் செல்லப்பட்டதையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில், ஆடைத் திருட்டு நடந்திருப்பது இதுதான் முதன்முறை என்றார் அவர்.
“அந்தப் பெண் எனக்குத் தெரிந்தவராக இருக்கலாம். சற்று நொண்டியபடி சென்ற அவர், அருகில்தான் வசித்து வருகிறார். அவரோ அவருக்குத் தெரிந்தவரோ காற்சட்டைகளைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இதனைப் பதிவிடுகிறேன். நான் சிராங்கூன் நார்த் அவென்யூ 3, புளோக் 554இல் வசித்து வருகிறேன்,” என்று அந்த ஸ்டோம்ப்வாசி கூறியுள்ளார்.
இதன் தொடர்பில் காவல்துறையிடமும் புகாரளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். காவல்துறையும் அதனை உறுதிசெய்ததாக ஸ்டோம்ப் செய்தி தெரிவித்தது.