அணு ஆற்றல் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் ‘யுரேனியம்’ உலோகத்தை, கையிருப்பில் வைத்துக்கொள்ளும் திட்டம் சிங்கப்பூருக்கு இல்லை என்று வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதிநவீன அணு ஆற்றல் தொழில்நுட்பங்களைப் புரிந்துகொண்டு மதிப்பிட, சிங்கப்பூர் அதன் திறன்களைப் பெருக்கிக்கொண்டு வருகிறது என்றார் அவர்.
அணு ஆற்றலைச் செயல்படுத்த அரசாங்கம் எடுக்கும் எந்த ஒரு முடிவும், உள்ளூர்ச் சூழலில் அணு ஆற்றலின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, கட்டுப்படியான விலை, சுற்றுச்சூழல் நீடித்த நிலைத்தன்மை ஆகிய அம்சங்களை ஆழமாக ஆராய்ந்ததன் அடிப்படையில் எடுக்கப்படும் என்றார் அமைச்சர் டான்.
கரியமிலவாயு வெளியேற்றத்தை 2050ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்திடும் முயற்சியில் அதே ஆண்டுக்குள் அணு ஆற்றலின் திறனை மும்மடங்காக்கும் திட்டத்திற்கு 22 நாடுகள் 2023ஆம் ஆண்டில் ஆதரவு தெரிவித்தன.
அணு ஆற்றலைக் கையாள்வது குறித்து சிங்கப்பூர் இன்னும் முடிவேதும் எடுக்கவில்லை என்ற திரு டான், அனைத்துலக நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொண்டும் புதுத் திறனாளர்களுக்குப் பயிற்சி அளித்தும் சிங்கப்பூர் அதன் திறனை மேம்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.