தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, உள்ளூர்க் கவிஞர்களின் கவிதை வரிகளையும் புகைப்படங்களையும் தாங்கிய பதாகைகள் சிராங்கூன் சாலையை அலங்கரிக்கின்றன.
அறுபது பேரைச் சித்திரிக்கும் பதாகைகள், சாலையின் இருபுறமும் பொருத்தப்பட்டிருப்பது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிங்கப்பூர்ப் படைப்புகளை மக்கள் அறிந்துகொள்ள இது நல்வாய்ப்பு என்று சொன்னார் இதில் இடம்பெற்றுள்ள தமிழறிஞர் சுப திண்ணப்பன்.
சித்திரக்கவி என சிறப்பிக்கப்படும் மறைந்த கவிஞர் வி.இக்குவனத்தின் வரிகளைத் தேர்ந்தெடுத்தவர் அவருடைய மகன் டாக்டர் சுவாமிநாதன். தன் தந்தைக்குத் தமிழ் மீது இருந்த பற்றைச் சொல்லும் வகையிலும், படிப்போருக்கு தமிழார்வத்தைத் தூண்டும் வகையிலும் அவ்வரிகள் இருப்பதாக டாக்டர் சுவாமிநாதன் கருதுகிறார்.
பரபரப்பான வாழ்வில், உள்ளுர் படைப்பாளிகள் குறித்து சற்றே இது நினைவூட்டும் எனவும் இப்பழக்கம் தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழரின் ஆதிப் படைப்புகளில் ஒன்று கவிப்படைப்பு எனவும் தலைமுறைகள் தாண்டி கவிதைகள் எழுதிவரும் கவிஞர்களை அங்கீகரிப்பது சிறப்பு எனவும் சொன்னார் கவிமாலை அமைப்பின் தலைவி இன்பா.
மாணவர்கள் நாளை தாங்களும் இதில் இடம்பெற வேண்டும் எனும் ஆசையில், ஆர்வத்துடன் செயல்படுவார்கள் என்றார் அவர்.
தமிழ் எனும் ஒரே புள்ளியில் அனைவரையும் இப்பதாகைகள் இணைத்துள்ளதாகக் கருதுகிறார் திரு மில்லத் அகமது.
கவிஞர்களின் புகைப்படங்களோடு இடம்பெற்றுள்ள கருத்துகள் பொதிந்த வரிகளைப் பார்க்கும் ஏதோ ஒருவருக்கு அவை ஊக்கமளிக்கலாம் எனவும் அதுவே இப்பதாகைகளின் வெற்றியாக அமையலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“சில கவிதை வரிகளின் வீரியம் அவற்றை மனத்தில் ஆழப் பதிய வைக்கும். அவ்வாறு, பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள், கடந்து செல்கையில் படிப்பவர்களின் மனங்களில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார் திரு இறை. மதியழகன்.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மொழி மாதத்தில், மொழிப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பதாகைகள் வைக்கப்படுகின்றன.
உள்ளூர் கவிஞர்களின் புகழைப் பறைசாற்றும் விதமாகவும் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கிலும் இதைச் செய்துள்ளதாக கூறினார் லிஷா அமைப்பின் தலைவர் ரெகுநாத் சிவா.
தமிழார்வம் உள்ள அடுத்த தலைமுறை இளையர்களுக்கு, படைப்பாளியாக வேண்டும் எனும் உந்துதலை இத்தகைய முயற்சிகள் ஏற்படுத்தும் என்று அவர் நம்புகிறார்.
லிஷா அமைப்பைச் சேர்ந்த ஐவர் கொண்ட குழு, பிரபல கவிஞர்களுடன் புதிதாக கவிதை எழுதுபவர்களையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இது அவர்களுக்கு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற ஊக்கம் அளிக்கும் என்று லிஷா குறிப்பிட்டது.
தமிழ் மொழி மாதத்தின் சிறப்பு, அதையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து தெரியாத மக்களும் இந்தப் பதாகைகள் மூலம் தெரிந்துகொள்கின்றனர் என்றார் தமிழார்வலரும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவருமான திரு ஜோசஃப் சேவியர்.