புகழ்பெற்ற அமெரிக்க பாப் இசைப் பாடகர் புரூனோ மார்ஸ், சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் ஏப்ரல் 3, 5, 6ஆம் தேதிகளில் இசை நிகழ்ச்சி படைத்தார்.
‘விஐபி’ எனப்படும் முக்கியப் பிரமுகர்களுக்கான நுழைவுச்சீட்டையும் சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் ஊழியர் அட்டையையும் போலியாகத் தயாரித்து, அந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றதாகக் கூறப்படும் 23 வயது ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கெமரூன் குடியரசைச் சேர்ந்த அந்த ஆடவரின் பெயர் கார்ல் பிலிப் ஜியோமோ டெங்கு. போலியான ஆவணங்களைத் தயாரித்தது தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளும், அத்துமீறி நுழைந்தது, அத்துமீறி நுழைய முயன்றது, மோசடி, மோசடி செய்ய முயன்றது ஆகியவை தொடர்பில் தலா ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 6ஆம் தேதி முதல் கார்ல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 12ஆம் தேதி அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
ஏப்ரல் 3ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் கார்ல், போலியாகத் தயாரிக்கப்பட்ட ‘விஐபி’ நுழைவுச்சீட்டையும் சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் ஊழியர் அட்டையையும் பயன்படுத்தி முக்கியப் பிரமுகர்களுக்கான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்பட்டது.
மீண்டும் ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 8 மணியளவில் அவர் மேற்கொண்ட முயற்சி பலிக்காமல் கைது செய்யப்பட்டார்.
வழக்கு ஏப்ரல் 26ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.