தெம்பனிசில் இருவரைப் பலிவாங்கிய வாகன விபத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார் ஓட்டுநர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தது, அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்தியது, அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியது ஆகியவற்றின் தொடர்பில் 42 வயது முகம்மது ஷஃபி இஸ்மாயில் மீது வியாழக்கிழமை (ஏப்ரல் 25) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
விபத்தை விளைவித்த பிறகு வாகனத்தை நிறுத்தாததற்காகவும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஷஃபி $30,000 பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டார். வழக்கில் சாட்சிகளுடன் அவர் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் ஷஃபி கையில் கட்டுடன் நீதிமன்றத்துக்கு வந்தார். காவல்துறையினரும் ஏத்தோஸ் அதிகாரிகளும் அவரை அழைத்து வந்தனர்.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு இரண்டிலிருந்து எட்டு ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். குற்றவாளி வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்படலாம்.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை, 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஷஃபியின் வழக்கு வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது. அவர் நீதிபதியின் முன்னால் எவ்வித உணர்வையும் காட்டிக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஏதேனும் சொல்ல விரும்புகிறாரா என்று நீதிபதி கேட்டபோது தான் வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கப்போவதாக ஷஃபி கூறினார்.
ஷஃபியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அவர் மீது மின்சாரக் கண்காணிப்புக் கருவியைப் பொருத்துமாறு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். அவர் தப்பியோட வாய்ப்பிருப்பதாக அவர்கள் எச்சரித்தனர்.
இதுகுறித்து பேசிய ஷஃபி, “எனது கடப்பிதழையும் அனைத்து ஆவணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துவிட்டதால் என் மீது கண்காணிப்புக் கருவியைப் பொருத்தத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நான் இன்று இங்கு வந்திருக்கிறேன், இனியும் நீதிமன்றம் தொடர்பான விவகாரங்களுக்கு வருவேன்.
“எனினும், இதுகுறித்து நீதிமன்றம்தான் முடிவெடுக்கவேண்டும்,” என்று சொன்னார்.