புதுடெல்லி: இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் ‘விவிபேட்’ எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் சில இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன.
அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மூன்று அமைப்புகள் மனுக்கள் தாக்கல் செய்தன.
இம்மனுக்களை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் கடந்த சில நாள்களாக பரபரப்பு வாதங்கள் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை அன்று ‘விவிபேட்’ வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பில், “பழைய வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் செல்ல முடியாது. தற்போதைய நடைமுறையே சரியாக தான் உள்ளது.” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ‘கன்ட்ரோல் யூனிட்’, விவிபேட் இயந்திரம் ஆகிய மூன்றிலும் நிறைய சந்தேகங்களை எழுப்பி நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள தொழில்நுட்ப ரீதியான, அறிவியல் ரீதியான ஆதாரங்களையும், வாதங்களையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்று நீதிமன்றம் கூறியது.
‘விவிபேட்’ இயந்திரங்கள் கடந்த 2013-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன.